கனவுகள் வாங்குபவன்

கனவுகள் நன்றாயிருக்கின்றன
நிஜத்தினை விட என்றெண்ணிதான்
கனவுகளை சீசாக்களில் பிடித்து
வளர்க்கத் தொடங்கினேன்...
முந்தா நாள் கண்ட அந்த கனவினையும்
சேர்த்து ஆயிற்று மொத்தம்
லட்சத்து நாற்பதாயிரம்
எதார்த்தங்கள் கோரப்பற்களால்
உயிர் குடிக்க முற்படும்போதும்
நிகழ்காலம் துரோகக் கத்தியை
கூர் தீட்டி வன்மம் கொள்ளும் போதும்
யோசித்துபார்க்கவே முடியாத
அபத்தங்கள் மூச்சைப் பிடித்து
கழுத்தை நெரிக்கும் போதும்
ஒவ்வொரு சீசாக்களாய் திறந்து
என் கனவுகள் விடுவித்து
அவை சொல்லும் கதைகளை
கேட்டுக் கேட்டு என்னை
மீட்டெடுத்துக் கொள்வதுமுண்டு...
நாளையும் எனக்கு வேறொரு
கனவு வரும்....
என்ற கனவோடுதான்
நித்தம் மல்லுக்கட்டிக் கொண்டிருக்கிறேன்
இந்த நிதர்சனமற்ற
அரக்க வாழ்க்கையொடு...!



தேவா சுப்பையா...

எழுதியவர் : தேவா சுப்பையா... (23-Nov-15, 4:37 pm)
பார்வை : 85

மேலே