களிறுக்கு ஓர் கடிதம்

(இந்த வருடம் விநாயகர் சதுர்த்திக்கு முதல்நாள் எழுதியது)
அனுப்புநர்: ஜெகன் பிரகாஷ்
பூலோகம்

பெறுநர்: பிள்ளையார் (எ) விநாயகர்
கயிலாயம் (எனக்கு தெரிந்த வரையில்)

அன்புள்ள கஜமுகனுக்கு,

உன் பக்தன் எழுதிக் கொள்வது. நலம். நலமறிய அவா.
உனக்கு சுழியிட்டு பிறர்க்கு எழுதுவதை விடுத்து, உனக்கே எழுதலாயினேன்.

நாளை உனக்காக அனைவரும் இங்கு விழா எடுக்க உள்ளோம் என தெரிவிக்கவும்,
உனக்கு நன்றி கூறவும் இக்கடிதத்தை எழுதுகிறேன்.

என் வீட்டருகே கட்டியிருந்த ஒலி பெருக்கியில் உன் பாடல்தான். அதிகாலை துயிலுரிக்க
வேண்டும் என்ற என் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றியதற்காக நன்றி.

பசியால் வாடும் பாமரர்க்கு உணவளிக்க கரங்கள் இல்லாத நிலையிலும், அருகே உள்ள
உன் கோவிலில் தரம் பார்த்து அளிக்கப்படும் சர்க்கரைப் பொங்கலுக்காக நன்றி.

ஏழை பெண்ணொருத்தியின் மாங்கல்ய தங்கத்திற்கு தன் வாழ்க்கை முழுவதும் வியர்வை
சிந்தும் அப்பாக்களுக்கு மத்தியிலும், ஜொலிக்கும் உன் ஐம்பொன் சிலைக்காக நன்றி.

வேதங்கள் முதுவென்று வாழ்வுநெறி இதுவென்று சாத்திரங்கள் உரைத்த போதும்,
அறியாமல் கற்சிலை முன் எங்களை ஐந்து நாளிகை நிற்க வைப்பதற்காக நன்றி.

இயற்பியலில் இந்தியா இமயத்தை தொட்டாலும், யானையால் எலியின் மேல்
பயணிக்க முடியுமா என எங்களை சிந்திக்க விடாமல் செய்ததற்கு நன்றி.

பெருவயிறான் நீ என சொல்லி நாங்கள் சாப்பிடப் போகும் கொழுக்கட்டைகளுக்கும்,
அது செரிப்பதற்காக விடப்பட்ட விடுமுறைக்கும் நன்றி.

போறாமை கொண்டு சகமனிதர்களிடம் நித்தம் போர் புரியும் எங்களை பொய்யாக
ஒருநாள் இனிப்பு வழங்க வைப்பதற்காக நன்றி.

இணையத்தில் நாங்கள் இருக்கும் ஒவ்வொரு குழுவிலும் பகிர்வதற்காக ஒரு செய்தியும்,
அடையாளத்திற்கு உன் பல படங்களையும் தந்ததற்காக நன்றி.

வேற்றுகிரகவாசிகளை மற்றவர்கள் செவ்வாயில் சென்று தேடும் நிலையிலும், உனக்கே முகம் படைத்து,
ஆயுதம் கொடுத்து, விருந்தளிக்கும் பேரறிவை கொடுத்ததற்காக நன்றி.

இந்தியர்கள் இருக்கும் வரை நீயும் இருப்பாய் என்ற நம்பிக்கையிலும்,
உனக்கு தமிழ் புரியும் என்ற நம்பிக்கையிலும் எழுதுகிறேன்.

இப்படிக்கு,
பூஜை பொருட்களை இப்பொழுதே
தயார் செய்து விட்ட
உன் பக்தன்.

எழுதியவர் : ஜெகன் பிரகாஷ் (24-Nov-15, 8:20 pm)
பார்வை : 101

மேலே