புரிதல்
என்றும் புகாத
சேரிக்குள்
தலைவரின் நடைபயணம்
ஏளனமாய் ஒதுக்கி வைக்கப்பட்டவர்களுக்கு
ஏழெட்டு கும்பிடு
சீந்துவாரின்றி இருந்தோருக்கு
சீமான் போன்ற கவனிப்பு
முடியாத முதியோரிடம்
முதுகு வளைந்த விசாரிப்பு
தாய்மார்களிடம்
தன்மையான பேச்சு
ஒரு நாளும் இயங்காத
தண்ணீர் குழாயில்
இருபத்திநாலு மணி நேர
தண்ணீர் வரத்து
வழக்கத்திற்கு மாறாய்
மின்தடையற்ற இரவுகள்
காலை முதல்
மாலை வரை
சாலை சீரமைப்பு பணிகள்
விறகு வெட்டக் கிளம்பிய
ஊர் பெருசு
சர்வசாதாரணமாய் கேட்டார்
“எழவு
தேர்தல் வருதாலே?”
-ப்ரணா (எனது "தானியம் கொத்தும் குருவிகள்" தொகுப்பிலிருந்து...)