நானே நாமாக

புயல் வந்து ஓய்ந்தது
புகட்டிய பாடம் பதிகிறது
நானென்ற எண்ணம் மாறி
நாமெனும் சிந்தனை ஓங்குகிறது

'இந்த நிலை மாறும்'
இதுவே இன்றைய மந்திரம்
பொறுமை அதன் சொல்லின்
பொருள் உணரும் தருணம்

வரண்டு நிலம் வாடக் கண்டு
வருணன் வந்து கொட்டினான்
வந்தவரைத் தங்க வைக்கும்
வழியற்றுப் போனோம் நாம்

வீரம் குறைந்தவர் இல்லை
வீடு வாசல் இழந்தாலும்
நீரிலிருந்து எழும்பி நாமும்
நீண்ட பயணம் தொடர்வோம்

மீண்டும் நிமிர்ந்து எழுந்திட
மீனாய்த் துளிர்த்து உயிர்த்திட
மட்சயனாய் வந்த பரமன்
மண்ணில் தோன்றியே காக்க.

எழுதியவர் : மீனாள் மணிகண்டன் (10-Dec-15, 8:07 pm)
சேர்த்தது : Meenal Manikantan
Tanglish : naaney namaga
பார்வை : 929

மேலே