மஞ்சாடிக் காதல்

மஞ்சாடி விதையெடுக்க
மத்தியானம் கூப்பிட்ட
கிளையேறி நான் உலுக்க
கீழ நின்னு எடுத்துக்கிட்ட

கொத்துக் கொத்தாப் போட்டதெல்லாம்
மொத்தமா என் காதலடி
விழுந்திர்ந்த விதைகளெல்லாம்
செவந்த என் ஏக்கமடி

ஒவ்வொரு விதையிலையும்
ஒனக்கொரு சேதி சொன்னேன்
முத்தா அது சொல்வதெல்லாம்
முத்தாத என் மோகமடி

உதிர்ந்த சிகப்பிலெல்லாம்
ஒஞ்சிரிப்பப் பார்த்திருந்தேன்
ஒனக்குள்ள ஒளிஞ்சுக்கிட
பச்சையெல்லாம் பதுக்கிவச்சேன்

இளங்காயா இல்லாம
இருக்க சருகப் போடச்சொன்ன
வார்த்தையத்தான் புரிஞ்சுக்கல
வதங்கிப் போச்சு சிவக்கவில்ல...

...மீ.மணிகண்டன்

எழுதியவர் : மீ.மணிகண்டன் (17-Dec-15, 11:41 am)
பார்வை : 95

மேலே