நட்சத்திர நாயகி -சுஜய் ரகு
![](https://eluthu.com/images/loading.gif)
என் கவிதைகளுக்குப்
பரந்த மனது அதனால் தான்
அதன்
நரம்பெங்கிலும்
நீ பூத்திருக்கிறாய்
சாலைப் பயணத்தின்
ஒரு குளிர் நிழல் போல்
கடந்து போகிறது
நீ உதிர்க்கும்
ஒவ்வொரு புன்னகையும்
நட்சத்திரத்தின் நாயகி
நிலாச் சூடி
நடந்து வருவதை
பூ மலர்த்தும் பொழுதில்
கண்களிலேந்துகிறேன்
என் காலவூற்று
விரயமாகிறது
உன் பாதம் பதிந்து போகும்
நிலத்திலிருந்து
திரள் மேகங்களில்
மிதந்தபடி
நீ முகம்
திருப்பிக் கொள்கிறாய்
அர்ச்சதைப் பூக்களை
தலையில் சூடிக்கொண்டு
காதல் எனக்குள்
கல் என்கிறாய்
அதுவே எனக்குக்
கடவுள் என்கிறேன்
உன் நினைவுகளின்
இருளாடையைப்
போர்த்திக் கொள்கிறது
என் தனிமை இரவு
வெளிச்ச திசைகளோடு
எப்போது வருவாய் நீ
-சுஜய் ரகு -