மரணத்தில் பறை

சுவாசத்
துவாரங்களில்
பஞ்சடைக்கப்பட
காய்ந்த விறகில்
காத்திருந்தது
சிதைக்கான வெந்தழல்.!
***
பறையொலி
சுதியில் பாடை
ஆடியது
ஒரு நதியலையாய்.
***
பறையே.....
நீதான்
ஆடைப்பயணத்தின் முடிவு.
ஆத்மப்பயணத்தின் துவக்கம்.
***
உன்
இசைக்குறிப்புகளில்
வழியனுப்புதல்
மட்டுமே
வரையப்பட்டிருக்கும்.
***
இதுவரை யாரும்
மீட்டாத
ஒரு நரம்பை
இறுதி யாத்திரையில்
இறந்தவனில் நீ
மீட்டிவிடுகிறாய்.!
***:
இதழ் உதிரும்
மலர்மாலைகளில்
யாரும் விரும்பாத
தேன் ஸ்வரம் நீ.
***
சகிக்கமுடியாத
உண்மையை
நீ சத்தமாய்
சொல்லிவிடுகிறாய்.
***
சதைவடிவான
வாசகத்தின்
இசைவடிவான
முற்றுப்புள்ளி நீ.!
***
நிரந்தரமில்லாத
வாழ்க்கையை
நீ வார்த்தைகளற்றுப்
பாடுகிறாய்!
இனிக்
காணக்கிடைக்காதவன்
காதுகளற்றுக் கேட்கிறான்.!
***
வீட்டிலிருந்து
புறப்பட்ட
சப்தமும் சரீரமும்
தூரத்தில் போய் மறைந்துபோகிறது.
***
ரசிக்கமுடியாதவனுக்கு
இசைக்கப்படுவதே
இந்த
வாத்தியத்தின் சோகம்.
***
மரணத்தை
தப்புக்குச்சிகள்
சரியாய்ப்பாட
செத்துப்போவது
எத்தனை அழகு.!
***
என் சாவுக்கு
பறையொலி சிந்தும்
மாடுகளை
யார்மேய்ப்பது இப்போது.?

நானுமொரு நாள்
பாடைநாயகனாக..

பறையொலி எவர்க்கு
க(வி)தைகளாகும் அப்போது?


- நிலாகண்ணன்

எழுதியவர் : நிலாகண்ணன் (2-Jan-16, 5:19 pm)
பார்வை : 129

மேலே