மழையுதிர் காலம்

மேகப் பொதிகளை
வானம் வரைக்கும்
சுமந்து சென்று
தாங்குவது யார் ?

முகிலின் முதுகில்
மின்னல் கிறுக்கல்கள்
எழுதி மீண்டும்
அழிப்பது யார் ?

வானுக்கும் பூமிக்கும்
தண்ணீர்த் தோரணம்
தொங்கவிட்டு
அறுப்பது யார் ?

வேரில் நீரைப்
பாய்ச்சும்போது
தலையில் இலையாய்த்
துளிர்ப்பது யார்?

மழையில் நனைந்த
மரங்களின் கூந்தலை
காற்றுக் கரங்களால்
துவட்டுவது யார் ?

நீர்நிலை வயிறு
நிறைந்த பின்னர்
ஆற்றுப் பெருக்கை
அமைப்பது யார் ?

கடலில் சேரும்
நன்னீர் சுவையை
உப்பாய் ஆக்கிச்
சிரிப்பது யார் ?

இத்தனை கேள்விக்கும்
ஒற்றை பதில்
இயற்கை !

இயற்கை எழுதும்
மாயச் செய்தியை
கார்காலம்
உரக்க வாசிக்கிறது !

அதை
சரியாகப் புரிந்துகொண்டால்
வாழ்க்கை இனிக்கிறது !

நீர்
அளவோடு இருந்தால்
புன்னகை !
கரைகளை மீறினால்
கண்ணீர் !

நாம்
இயற்கையோடு
இயைந்து போனால்
எல்லாம் நலம் !
இயற்கைக்கு
எதிராய்ப் போனால்
போர்க்களம் !

எழுதியவர் : மதிபாலன் (8-Jan-16, 11:15 pm)
பார்வை : 127

மேலே