பொங்கல் வாழ்த்து

எண்சீர்க் கழினெடிலடி ஆசிரிய விருத்தம்

ஆடியினைப் பார்த்தேயாம் விதைவி தைத்தோம்
---அன்போடும் பண்போடும் பிள்ளை போலே
கூடிவந்த நெல்மணிகள் யாவுங் காத்தோம்
---குடும்பம்போல் யாமானோம் வளர்ந்த நெல்லோ
வாடியயெம் பசிதீர்க்க வாய்த்த சேயாம்
---வந்ததொரு வாரீசாம் ! வளர்த்த பெண்ணைச்
சூடித்தான் கொடுத்திடவே தைமா தத்தில்
---சூக்குமமாய்ப் பொங்கலிட்டோம் வாங்க மக்கா !

செங்கரும்பு முறைமாமன் இருவர் சூழ்ந்து
---செழுமைமிகு மஞ்சளினால் பரிசம் போட்டு
மங்கையென நாணமுடன் வளைந்தி ருந்த
---மகளுக்குச் சடங்கிட்டு மகிழ்ச்சி யோடு
பொங்கிவரும் புதுப்பாவை நெல்ம ணிக்கு
---போக்கிடமும் வேறுளதென் றுணரச் செய்து
அங்கவளை யாம்மெச்சிக் கொஞ்சி யேதான்
---அறிவுரைகள் சொல்லிநின்றோம் அவளும் கேட்டாள் !

சின்னதொரு நாற்றெனவே உன்னை நட்டோம்
---சீறுகின்ற வேங்கையென அந்த நேரம்
கன்னலேநீ யாருக்கும் வளைந்தி டாது
---கருத்தைப்போல் ஆடிவந்தாய் அசைந்து வந்தாய் !
பின்பொருநாள் திடீரெனநீ வளர்ந்து விட்டாய்
---பிறைபோலே குணிந்துவிட்டாய் அதனால் பெண்ணே
உன்னையிங்கு வளர்த்தவனாய் உனக்குக் கொஞ்சம்
---உரைகளைநான் மொழிகின்றேன் நன்றாய்க் கேட்பாய் !

இதுகாறும் நீயிருந்த வயலோ இங்கே
---இனிமையுடன் நீபிறந்த வீடே காண்க !
பதுமையென நீயிங்கே விளைந்த தாலே
---பக்குவமாய் யாம்பார்த்தே யினியு னக்கு
புதிதாயோர் வீட்டினையும் காட்டி வைப்போம்
---புகுகின்ற அவ்வீட்டில் பிறந்த வீட்டின்
மதிப்பினையும் மரியாதை தனையும் நாட்டி
---மானமுடன் வாழ்ந்துவிட வேண்டு மம்மா !

புகுகின்ற அவ்வீட்டில் உன்னை நாங்கள்
---புதுக்கிடவே நாள்பார்த்துக் கிழமை பார்த்து
தகுதிமிகு தையைத்தான் தேர்ந்தெ டுத்தோம்
---தாரணியே அந்நாளில் கொண்டாட் டத்தில்
மிகுந்திருக்கும் மூழ்கியிங்கே திளைத்தி ருக்கும்
---மிளிர்வுடனே உனையுலகம் அன்று போற்றும்
வகைவகையாய் உனைப்பெற்றே அடுக்கி வைத்து
---வளமைகளைக் கண்டிடுவார் மகிழ்வைக் கொள்வார் !

காளைகளை அடக்கிடுவர் காளை யர்கள்
---கைவளைகள் குலுக்கிடுவார் கன்னி யர்கள்
வேளையெலாம் கந்தலையேக் கண்ட மேனி
---வேட்டியுடன் புத்தடை அணிந்து நிற்கும்
சூளையிலே புதிதாகப் பசுமை யாக
---சுட்டெடுத்த பானையிலே உன்னை யிட்டு
வாளையர்கள் குலவையிடப் பொங்கும் உன்னை
---வாழ்த்திடுவார் பெண்மகளே ! இன்ப மன்றோ ?

பொங்கலெனும் புதுநாளாம் அந்த நாளில்
---பொங்குகின்ற உன்னையுமே பரிதி முன்னே
மங்களமாய்ப் படையலிட்டு கைகள் கூப்பி
---மகளிரெலாம் ஆர்த்திடவே தமிழர் தம்மின்
தங்கதிரு நாளென்று கொள்ளு வாரே
---தமிழ்மக்கள் பொங்கலெனும் நாளைத் தங்கள்
இங்கிதமும் வீரமுடை ஈர மஃதும்
---இயம்பிடவே கொண்டாடி மகிழு வாரே !

-விவேக்பாரதி

எழுதியவர் : விவேக்பாரதி (14-Jan-16, 9:42 pm)
பார்வை : 194

மேலே