பசிக் கொடுமை --முஹம்மத் ஸர்பான்

ஆலம்விழுதில் கயிறுகட்டி தொட்டில் ஆட்டும்
ஆரிராரோ பாட்டுக்காரியின் வரண்ட மருமத்தில் அணிவகுக்கும் எறும்புக்கூட்டம்
பசியால் கதறியழுவும் பிள்ளையை சமாதானம் செய்கிறது
***
வட்டநிலவை தட்டாக கண்களால் பார்த்து
கைவிடப்பட்ட பருக்கைகளை மொத்தமாக அள்ளி இரைப்பைக்குள் போட்டது
தென்றலின் துணையுடன் தெருமுனை குப்பைத்தொட்டி
***
மலரும் அமுதம் சிந்திடும் தேனீக்காய் மட்டும்
புல்லும் வேரை தியாகம் செய்திடும் மண் புழுவுக்காய் மட்டும்
கருப்பினமே உடல் வெந்து எரிகிறது ஆபிரிக்க மண்ணில்
***
சுருங்கிய இரைப்பைக்குள் ஏப்பம் விட்டு பார்க்கிறது
பாலை நிலத்தில் பூத்த கள்ளிச்செடியின் கூரிய முட்கள்
கிழிந்த நரம்புகளினாலும் சிந்திய கண்ணீரினாலும்
***
நெருப்புக்கவசங்கள் உடையாக அணியப்பட்ட தோளில்
பனிக்கட்டிகள் வீசப்பட்டு உடைக்கப்படாமல் எரிமலையின் பாகத்தை வீசிவிட்டு
அதன் மேல் எரிபொருள் நனைந்ததுணி போர்வையாக போர்த்தப்படுகிறது.
***
சிதறிய கண்ணாடித்துண்டுகளை உள்ளங்கை மேல் ஒட்டிக்கொண்டு
துருப்பிடித்த ஆணிகளையும் கூராக்கப்பட்ட ஆயுதத்தையும் ஏந்திக்கொண்டு
பல உடலை அடித்து சில உயிர்கள் வாழ்கிறது
***
கருவின் உறைவிடம் கருமைதான் ஈன்றவள் உள்ளமும் அதுபோலவா?
உருவின் காட்சிப் பிழைகள் அசிங்கம் தான் காதலின்றி காமம் ஈன்றதோ?
விடையில்லாத விடுகதைகளில் அனாதைக் கூட்டம் பசியாருகிறது
***
உடலை விற்று குடும்பப்பசியாற்றினால் ஒருத்தி
திசுக்களை விலைபேசி குழந்தைக்கு புட்டிப்பால் வாங்கினால் ஒருவன்
புண்ணின் திரவத்தை குவளைக்குள் நிரப்பி ஏப்பம் விடும் நிலையை
பசிக் கொடுமை என்பேன்.
***

எழுதியவர் : முஹம்மத் ஸர்பான் (21-Jan-16, 12:07 pm)
பார்வை : 324

மேலே