காட்சிப் பிழைகள் - 46

மௌனத்தின் ராகத்தில் பண்பாடிச் சென்றோம்
மெதுவாக இதமாகக் கலந்தாடி நின்றோம் !
கானத்தின் மத்தியிலே கார்மேக இடியாய்க்
காதலெனும் பிரிவினிலே விலகி நாம் சென்றோம் !
வாவென்று நீசொல்ல விழியேறி வந்தேன்
வளமான நற்காதல் கனவாகத் தந்தேன்
போவென்னும் சொல்லாலே நீ மாய்த்த நேரம்
போக்கற்றக் காற்றாகத் திசைமாறி நொந்தேன் !
வலியோடு செல்கிறது என் வாழ்வின் மிச்சம்
வழிமாறிப் போயாச்சு இனியென்ன அச்சம் ?
ஒலியோடு சேராத மெதுவான தொணியில்
அழுதபடி செல்கிறது வாழ்நாளின் எச்சம் !
இடையோடு முத்தமிட இயலாத நேரம்
இமையோரம் சிரப்பூஞ்சிக் கார்காலம் நேரும்
நடைபோடத் தெரியாத காற்றுக்குக் கூட
நயமாகப் புரிகிறது என் கண்ணின் ஈரம் !
நீயற்ற என் நெஞ்சம் நடமாடும் சூலை
நீர் கூட இல்லாத சகாராவின் சாலை
பூவற்றுப் போனாலே பூமிக்குள் இங்கே
புன்னகை தான் செய்திடுமோ பூப்பூத்த சோலை ?
காட்சிகளே பிழையானால் கண்ணெங்கே போகக்
காதலிங்கு பிழையாக ! மனம் வலியில் நோகச்
சாட்சிக்கோ யாருண்டு ? என்காதல் சொல்லச்
சாதலினைக் கூப்பிட்டேன் உயர் சாட்சி யாக !
பிரிவுதனைத் தீர்த்திடவே மருந்தாக வாராய்
பிரியத்தான் வேண்டுமெனில் நஞ்சை நீ தாராய் !
-விவேக்பாரதி
நன்றி :
கசல் எழுதச் சொன்ன ஜின்னா அண்ணாவுக்கும்,
அதனைக் கற்றுக் கொடுத்த சியாமளா அம்மாவுக்கும்.
மேலும்
இரவின் தென்றலுக்கும்,
கணினி விசைப் பலகைக்கும்,
தொலைந்து போன கற்பனைக் காதலிக்கும்,
தூக்கம் கெடுத்த அழுகைக்கும்...
இன்னும் பலப்பவற்றிற்கும்....