நடமாடும் நதிகள் -20

மஞ்சள் பூக்களுக்கு
நடுவில் அலைகிறது பட்டாம்பூச்சி
தென்றல் வரும் நேரம்

தாய் மர நிழலில்
துயிலும் மலர்கள்
சருகுகளின் மடி இதம்

அதிகாலை வாசம்
நெற்றியில் முத்தமிடுகிறது
கிழக்கு வெயில்

நேற்றும் இன்றும்
நடந்த சிநேகத்தில்
வழியெங்கும் புன்னகை

என்னைப் பார்த்து
ஈறுகளில் சிரிக்கிறது மழலை
இன்றும் கண்கள் சுருக்கியபடி

மழை நனைத்த பாதங்கள்
குளிர் கொண்டு மூடுகின்றன
முன்பனிக்கால இரவுகள்

தலை குளித்த குருவியின்
சிறகிலிருந்து உதிர்கிறது
முதல் மழைத்துளி

நீலக் கடல் சுமந்த
பறவை அலையெனக் கொள்கிறது
கூடடையும் ஞாபகங்கள்

வேண்டுமென்று கேட்கவில்லை
இயல்பாய் தோள் சாய்கிறது
காதல்

மைனாக்கள் கடந்த பின்னும்
வானெங்கும் நீல வண்ணம்
உன் சாயலில்.....






தோழமை ஜின்னா
ஓவியர் காளிதாஸ்
முரளி ஐயா மற்றும் தோழர் ஆண்டனி
அவர்களுக்கும் என் நன்றிகள்

எழுதியவர் : கார்த்திகா அ (25-Feb-16, 12:07 am)
பார்வை : 487

மேலே