சவாரிக்காரர்கள்

வசதிகளில் குளித்து
வாயெல்லாம் பொய் பூசி
வாசலுக்கு வருகிறார்கள்
வாக்குக் கேட்க

தேசத்தின் தலைவிதியைத்
தீர்மானிக்கும் எங்கள்
தேர்தல் காலப்
புள்ளடிகள்.

வாக்குறுதி வலை
விரிப்புக்களில் அகப்படும்
அப்பாவிப் பாமர மீன்கள் இல்லை
இனியும் நாம்

கட்டித்தருவோம்
வீடுகளென்றீர் அன்று
இன்னும் சிதைந்தது
போன குடிசைகளுள் நாம்.

நீங்கள் கறுப்புச் சந்தைகளில்
கொட்டி விற்ற பைகளில்
கட்டி பட்ட சீமெந்தாக
இறுகிக் கிடக்குதெம்
மனங்களும்..

எமக்களிக்கபட்ட
புனர்வாழ்வு புனரமைப்பு
நிதிகள் எல்லாம்
பரிணாமம் பெற்ற
உங்கள் வீட்டு
மொசைக் தரைகள்..

என்றும் போல்
இன்றும் வருகிறீர்கள்
வெற்று வார்த்தைகளுடன்
உங்கள் சௌகரியச்
சவாரிகளுக்கு
குனிந்தே நடக்க
பொதி எருதுகளா நாம்?

அழுக்குக் குடிசைகளுக்குள்
அழையா விருந்தினராய்
ஆஜராகும் அரியாசன ராஜாக்களே
போய்வாருங்கள்
அவலங்கள் சுமக்காத
இன்னொரு விடியலுக்கு
மட்டும் அளிப்போம்
எம் புள்ளடிகளை..

எழுதியவர் : சிவநாதன் (25-Mar-16, 7:22 pm)
சேர்த்தது : சிவநாதன்
பார்வை : 179

மேலே