எந்தன் மகனே கோவிந்தா-----

எந்தன் மகனே கோவிந்தா-----

மகன்
அப்பா இந்தக் காலையிலே
---எங்கே நீயும் போகின்றாய்?
நானும் கூட வரலாமோ?
--- வீட்டில் பொழுதே போகலையே

தந்தை
எந்தன் மகனே கோவிந்தா, நான்
---ஓட்டுப் போடப் போகின்றேன்
வந்தால் நீயும் என்னுடனே
---இடைஞ்ச லாக இருந்திடுமே.

மகன்
இடைஞ்சல் எதுவும் செய்யாமல் நான்
---நல்ல பையனாய் இருக்கின்றேன்
முடியா தென்று சொல்லாதே !
---மீண்டும் கெஞ்சிக் கேட்கின்றேன்.

தந்தை
சரிதான், என்னுடன் நீயும் வா ;
---நாளை இந்நாட்டின் தலைவன் நீ ..
தேர்தல் பற்றி தெரிந்துகொள்ள
-----பாடம் உனக்கே சொல்வேன்நான்.

மகன்
தேர்தல் என்றால் என்னப்பா?
----புரியும் படியே சொல்நீயே!

தந்தை
சேரர், பாண்டியர் சோழரென
---மன்னர் இருந்தது அக்காலம்.
யாரும் மன்னர் ஆகிடலாம்
----இதுதான் குடியர சுக்காலம்.
நாமோர் பெரிய குடியரசு;
----நாட்டின் மன்னர் நாம்தானே!.
நம்மில் ஒருவரைத் தேர்ந்தெடுத்து
---தேர்தலில் மந்திரி ஆக்கிடுவோம்.

மகன்
மன்னர்கள் ஆட்சி செய்கையிலே
---கப்பம் கேட்பார் எனக்கேட்டேன் ;
மந்திரி ஒருவர் வந்தபின்னே
---அவர்க்கும் கப்பம் கட்டணுமோ ?

தந்தை
காரியம் நமக்கு நடக்குமுன்னே,
----கப்பம் நிச்சயம் கட்டணுமே..
இப்போ இதற்கு பெயர்மாற்றி
----லஞ்சம் என்றே வெச்சாச்சு.

மகன்
மன்னர் ஆட்சி மட்டும்தான்
---தலைமுறை தோறும் தொடருமென்பார்
மந்திரி இவர்கள் ஆட்சியுமே
---தலைமுறை ஆகத் தொடர்வதென்ன?

தந்தை
தந்தை தாத்தா முன்னோர்கள்
---ஊழல் செய்து குவித்தபணம்
இருக்கும் வரையில் தேர்தலிலே
---இவர்கள் தோற்க வழியில்லை.

மகன்
ஓட்டுப் போடும் இடத்தைநாம்
---சாவடி என்பது எதனாலே?

தந்தை
தேர்தலில் ஜெயித்து ஆட்சிக்கு
---வந்தபின் அடுத்த தேர்தல்வரை
ஓட்டுப் போட்ட மக்களையே
---"சாவ டிக்கிறார்" அதனாலே.

மகன்
எனக்கும் ஓட்டுப் போட்டிடவே
---ஆசை, அருமை அப்பாவே .
எப்போ நானும் போட்டிடலாம் ?
----பதிலைச் சொல்நீ இப்போதே

தந்தை
அவசரம் வேண்டாம், இதற்குள்ளே !
----அன்பு மகனே கோவிந்தா.
அகவை பதினெட் டெட்டிடுவாய் ,
-------சட்டம் இதுவே பொறுத்திடுவாய் .

மகன்
பதினெண் வயது வேண்டுவது
----நாட்டில் நிலவும் சட்டமென்றால்
எதனால் இந்த சட்டதிட்டம்?
----எனக்கதை நீயே சொல்வாயா?

தந்தை
ஓட்டுப் போடணும் என்றாலே
-----முழுதாய் முட்டாள் ஆகணுமாம்.
முழுதும் முட்டாள் ஆகிடவே
-----பதினெட் டாண்டுகள் பிடித்திடுமே!.

மகன்
ஆகா ! அடுத்த தேர்தலுக்குள்
-----பதினெண் வயதை எட்டிடிடுவேன்
முழுவதும் முட்டாள் ஆகிவிட்டு
-----ஒட்டு உரிமையைப் பெற்றிடுவேன்.

எழுதியவர் : ரமேஷ் (கனித்தோட்டம் ) (17-May-16, 9:30 am)
பார்வை : 391

மேலே