கண்கள்

மனிதனுடைய உறுப்புகளில்
கண்கள்தான் மிகவும் சிறப்புடையதாம்
ஆம், கண்கள் மட்டும் இல்லையேல்
உலகமே இருண்டுதான் காணப்படும்
வாழ்வும் இடர்பட்டு தடைபடுகிறது
கண்பார்வையோ பெரும்பாலும்
மனதைத் தழுவியே காட்சி நல்கும்
என்றுரைப்பர் சான்றோர்கள் - ஆம்,
கண்ணுக்கும் உள்ளத்திற்கும் இடையேயுள்ள
உன்னத உறவினை திருவள்ளுவர்
பல இடங்களில் கூறியுள்ளார்!
காதலைப் புலப்படுத்தும் கருவி கண்கள்தான்
வாய் மொழியைவிட விழி மொழிக்கே
ஆற்றல் அதிகம் என்கிறார் வள்ளுவர் ! ஆம்,
நெஞ்சோடு நெஞ்சம் கலந்தமையை
மொழி ஒன்றும் விளக்காது
விழிகள்தான் நன்கு விளக்கும்!
ஈர நெஞ்சம் வீர நெஞ்சம்
கலை நெஞ்சம் காதல் நெஞ்சம்
இவ்வனைத்தையும் புலப்படுத்தும்
கருவி கண்கள்தானே ! அது மற்றும் அன்று
கவலை துடிப்பு சோர்வு ஏக்கம்
கிளர்ச்சி போன்ற உணர்வுகளை
விழிகள்தான் முதலில் வெளிப்படுத்தும்
கண்ணின் சிறப்பினை சற்று உற்று நோக்கினால்
உடலில் எப்பகுதியில் புண் ஏற்பட்டாலும்
சிறு வலி தோன்றினாலும்
கண்கள்தான் முதலில் அதை உணர்ந்து
நீர் சொரிக்கின்றது என்றால் அவை மிகையாகாது
ஆம், கண்களுக்கு ஏதேனும் ஏற்பட்டாலும்
அந்த துயரங்களை வேறு எந்த உறுப்பும்
எண்ணி வாடுவதில்லை! இல்லையா கண்ணே ?!