சின்னஞ் சிறு கிளியே

அவள் அப்போதிலிருந்து
அழகானவளாகவும்
என்னை
அழவைப்பவளாகவும்
இருந்து கொண்டிருக்கிறாள்


மூக்கு சுளித்து
கண்கள் விரித்து
உதடுகளால்
பழிப்புக் காட்டும் போதும்


நீ இப்படித்தான்
என நான்
பொய்யுரைக்கையில் எனை
இடித்துக் காட்டும் போதும்


அவள்
ஓர் அப்சரஸை போல
அத்தனை
அழகாய் இருக்கிறாள்


செல்லமாய் சிணுங்கி
எனை கோபமூட்டி
பின் முத்தங்களால்
சமாதானம்
செய்யும் போதும்


என்னோடு கோபித்துக் கொண்டு
கண் தொலைவில்
கண்ணாமூச்சி ஆடும் போதும்


நான் உறங்கிப் போகும்
சமயங்களில்
கேசம் கலைத்து
என் காது மடல்
கடிக்கும் போதும்


குறும்புக்காரி வேஷத்திலும்
அவள் அத்தனை அழகாய் இருக்கிறாள்


எப்போதும்
என் தனிமைகளில்
ஒரு பேயைப் போல
புகுந்து கொண்டு
சில நேரங்களில் எனை
திடுக்கிடச் செய்பவளாயும்


பல நேரம்
என் கவிதைகளின்
கருவாயும்
நிழலாடுகிறாள்


இது வரையில்
இந்த உலகிற்கு
இறைவன் தர மறுத்த
அழகை எல்லாம்
வஞ்சனையின்றி கண்களில்
தேக்கிக் கொண்டு


கலை மானின் மருண்ட
பார்வையில்
எனை கட்டிப் போடுகிறாள்


என் அந்தரங்கத்தின்
அத்வைதமாயும்

என் நிம்மதி அத்தனையும்
அவளுக்குள்ளே
ஒழித்து வைத்தவளாயும்

புதையல் கொண்டாடும்
கரீபியன் தீவு போல
விகல்பமின்றி
புன்னகைக்கிறாள்


அவள் செந்நிற பாதங்களை
என் மார்பில் பரவவிட்டு
முத்தங் கேட்டு என்னை
அடிமையாக்குகிறாள்


பித்துப் பிடித்த
பக்தன் போல
அவள் அழகில்
தினமும் நான்
ஜெபித்து
மரித்து
ஜனித்துப் போகும்
இன்ப வதை செய்கிறாள்

ஆர்ப்பரிக்கும் கடலாயும்
அமைதி கொண்ட முகிலாயும்
அவள் அன்பில்
எனை கரைக்கிறாள்


அவள் கைகளுக்குள்
எனை சிறைப்படுத்தி
பெண்மையின்
ஒட்டு மொத்த
மென்மையையும்
எனக்கு கற்றுத் தருகிறாள்


அவளின்
இம்மென்ற சொல்லிலும்
இல்லையென்ற சொல்லிலும்
எனை பல நேரம்
பைத்தியம் பிடிக்க செய்கிறாள்


எனக்கும் அவளுக்குமாய்
ஓர் இரண்டாம்
உலகம் சமைக்கிறாள்
அத்தனை குழந்தைத்தனங்களையும்
அந்தக் கன்னங்களில்
அப்பிக் கொண்டு
என் மடி மீது
அவள் துயில வாகாய்
என் தோளில் மாலையாகிறாள்


பொய்க் கதை புனைகையில்
எனை ஓரப் பார்வை
பார்த்தபடி
நூறு டிகிரி டென்ஷனேற்றி
பதற்றம் பரவுகையில்


உதடு குவித்து
கண்ணில் கெஞ்சலோடு
என் மார்புக்குள்
ஒழிந்து கொள்கிறாள்


இத்தனையும் செய்து விட்டு
வருடங்களில் வளர்ந்து விட்டு
பிரியமானவன் கை சேர
எனை கை காட்டி


என் வளர்ப்பு
என் குழந்தை என
மார் நிமிர்த்தும் பொழுதினிலே


என் செல்ல ராட்சஷி
"உடம்பைப் பார்த்துக்கோ
கூட என் நினைவையும்"
என கட்டி
கலங்கி
கண்ணீரில்
எச்சிலொற்றி


தன்னவனோடு விடை பெறுகையில்
ஊஞ்சல் கட்டி
என் இமைகளுக்குள்
நின்றாடுகிறாள்


என் செல்லமே
வளர்ந்த என் அன்னைடா
நீ
வயது முதிர்ந்த
குழந்தை
உன் தகப்பன்
நான்.....


(மகள்களைக் கொண்டாடும்
ஒவ்வொரு அப்பாக்களுக்கும் சமர்ப்பணம். இதுவும் தமிழ் மகளின் அழகுதான். ஆனால் காதல் தந்தைக்குரியது)

எழுதியவர் : Shafiya (13-Jun-16, 7:13 pm)
பார்வை : 252

மேலே