காதல் வேதம்

"நண்பர் முகம்மது சர்பானின் எண்ணச் சுடரும் வண்ணக் கவியும் என்ற எண்ணத்தின் வண்ணத்தில் விளைந்து பதிவிட்டது இந்தப் பதிவு "






தங்க நிலவென மேனி கொண்டவள்
அங்கம் ஆதவன் தோற்றம் கொண்டவன்
எங்கோ?... இமை திறந்த விழிகள்
இங்கே சந்தித்து கொண்டது......


மங்கை ஏவும் மான்விழி அம்புகளும்
சிங்கம் வீசும் கயல்விழி கத்திகளும்
காதலெனும் ஒற்றைக் கோட்டில் - மோதல்
கொண்டு மோகம் கொண்டதே......


முத்தம் பகிராது பாவை இதழ்கள்
முகம் வாங்காது இதழ்தரும் காயங்கள்
பாடிப் பறந்தப் பறவைகளோ?... - கூடித்
திரிந்தது விரல்களின் நேசத்திலே......


கூவம் ஆற்றினை சுத்தம் செய்திடலாம்
பாவம் செய்திடும் சாதிகளை முடியாதே...
எதிர்நின்றால் எதிர்காலம் இல்லை யென்று
எதிர் துருவம் சென்றனரே......


கடந்து வரும் பருவ மாற்றத்தில்
கன்னியவள் மனம் ஏற்று - கல்யாணப்
புதுப் பெண் கோலம் பூண்டாள்
காதல் தூங்கையில் மணமும் புரிந்தாளே......


நெத்தியில் காதல் ஆணி வைத்து
சுத்தியால் ஓங்கி அடித்து - கள்வன்
மனதில் நீங்காது நினைவின் உரசலால்
பிரம்மச்சாரி வேடம் தரித்தானே......


உள்ளங்கள் இரண்டும் வலிகள் தாங்காது
உதிரத் துளிகளை உருக்கி எடுத்து
உலையின் உணர்வுகளாய் காவியம் சமைத்து
பிரிவின் தாகம் தீர்த்தன......


நல்ல காவியம் படைத்த மனங்கள்
நான்கு கால் இலக்கிய மேடைதனில்
பாராட்டுக்கள் பெறும் நேரம் - பலநாள்
பாராத விழிகள் பார்த்து களித்தன......


நிழல் விரிந்த பெரிய மரம்
இவள் பெயரும் அவன் பெயரும்
செதிக்கி வைத்த நிமிடங்களை - தொட்டுத்
தழுவின இருவர் கைகள்......


தீக்குள் விட்டு விரல் சுட்டதாய்
திடிரென்று கரம் எடுத்தாளே இவள்...
பனி விழுந்த மலர் தொட்டதாய்
இவனோ?... சிலையாய் நின்றான்......


வாடி வதங்கிய அந்த மலரும்
தாடி வைத்த இந்த சருகும்
விரல்கள் தீண்டிய நேசத்தில் - விருட்சத்தின்
தளிர்களாய் மீண்டும் துளிர்த்தன......


சோதனை வந்ததோ?... பேசிடாது மௌனங்கள்
வேதனை தாளாது உடைந்திடும் மொழிகள்
நாதம் மீட்டும் இதய வாசலில்
வேதமானது புனிதக் காதல்......

எழுதியவர் : இதயம் விஜய் (30-Jun-16, 12:51 pm)
Tanglish : kaadhal vedham
பார்வை : 373

மேலே