அழகே என் அழகே

விழிகள் கோடி வேண்டுமடி உன் புன்னகை பார்க்க
உன் விரல்கள் பத்தும் போதுமடி நம் கைகள் கோர்க்க
என் செவ்விதழ் முத்தம் உரசுமடி உன் பெண்மை நாண
காற்றில் மிதந்ததடி என் இதயம் உன் இதயம் சேர

கவிஞ்னனின் கற்பனையை தூண்டும் உன் கருவிழி கண்களில் கயலழகி
மெய்தொடும் உன் நசிக்காற்றில் பூமணம் வீசுவதால் சுகந்தழகி
செந்தாமரை இதழ்விரிய அணிவகுக்கும் முத்துப்பற்களால் வைரழகி
கார்மேகத்தின் ஒற்றை மின்னலாய் எட்டி பார்க்கும் நரையால் மின்னலழகி

பளிங்கு கழுத்தை தொட்டுரசும் தங்க சங்கிலியின் ஒளியில் சுவர்ணழகி
உள்ளங்கை திறக்கையில் ஓடும் நதிககளாய் படரும் ரேகைகளில் ஓவியஞ்சலி
அவள் அசைவிற்கிணங்கி கொஞ்சி சிணுங்கும் காதணியழகில் நாட்டியாஞ்சலி
மோகன சரீரம் அலங்கரிக்கும் அங்கங்களில் அவள் ரம்மியாஞ்சலி

பேறுகாலத்தின் முத்திரைகளாய் அவள் அடிவயிற்றுச் தழும்புகளில் வடுவழகி
கணுக்கால் கொஞ்சும் கொலுசுகளின் சிங்கார பவனியில் அவள் நடையழகி
விழிவசம் சிறைக்கொண்டு உன் புன்னகையால் காவல்காப்பதில் அழகரசி
வர்ண இழைகளால் தேகம் தீண்டும் சேலையழகில் எழிலரசி

குயிலிசை காவியமாய் உதிரும் சொற்றொடரில் குரலழகி
வசீகரிக்கும் கற்றை சுருள்முடி நெற்றி வருடும் அழகில் குழலினி
பருவநாட்களில் முகத்தை மொய்க்கும் மலர்மொக்கு பருக்களில் மோகினி
ஒப்பனையில்லா தேகத்தில் வியர்வை மொட்டுகளின் கோலத்தில் ரூபிணி

விண்ணுலகம் பார்த்திரா என்னவளே பிரம்மன் படைத்திட்ட உயிரோவியமே
தினமொரு யுத்தத்தில் மனம் படும் பாட்டினை உணர்வாயோ!
நகராத நாழிகையும் விடியாத பொழுதினையும் இயக்கும் என்சக்தியே
தாய்விட்டு வனவாசம் போதுமடி, திரும்பிவிடு தனிமையில் தவிக்கிறேன்

விழிகள் கோடி வேண்டுதடி உன் புன்னகை பார்க்க
என் விரல்கள் பத்தும் ஏங்குதடி உன் கை கோர்க்க
என் செவ்விதழ் முத்தம் தேடுதடி உன் பெண்மை காண
காற்றில் மிதந்ததடி என் இதயம் உன் இதயம் சேர!

எழுதியவர் : அருண்மொழி (1-Aug-16, 11:03 am)
Tanglish : azhage en azhage
பார்வை : 1380

மேலே