​தித்திக்கும் தமிழ் திகட்டாத தமிழ்

​மொழியின்றிப் பிறப்பவர் எவருமில்லை
வழியில்லை வாழ்ந்திட மொழியறியாது !
தாய்மொழி தமிழாம் தலைமொழியிங்கு
வாய்மொழி அன்று வரலாற்றுச்சான்று !

இலக்கணமுள்ள இலக்கிய படைப்புகள்
பறைசாற்றும் நம்மொழிப் பெருமையை !
காப்பியங்கள் உணர்த்திடும் காவியமாய்
எழிலோடு எடுத்துரைக்கும் ஓவியமாய் !

இனிமையே என்றும்நம் இன்பத் தமிழ்
எளிமையே எவருக்கும் ஏற்றத் தமிழ் !
உள்ளங்களை ஈர்த்திடும் ஈடில்லா தமிழ்
உள்ளவரை எங்களை காத்திடும் தமிழ் !

உலகத்தார் போற்றிடும் உயர்ந்த தமிழ்
விண்ணளவு புகழுடன் விளங்கும் தமிழ்
நாவினிக்கும் உச்சரித்தால் நம் நற்றமிழ்
நானிலத்தில் பரவி உள்ள பைந்தமிழ் !

சொற்சுவை பொருட்சுவை கலந்த தமிழ்
எந்நாட்டு மக்களும் கற்க விரும்பும் தமிழ் !
தித்திக்கும் பேசினாலே எங்கள் தமிழ்
திகட்டாத முக்கனியாம் மூத்தத் தமிழ் !

பழனி குமார்
​​

எழுதியவர் : பழனி குமார் (15-Sep-16, 7:10 am)
பார்வை : 263

மேலே