​யாதுமாகி நின்றாய்

யாதுமாகி நின்றாய் பெண்ணே நீ
கருத்தரித்த நொடி முதலாய் உலகினில்
கருத்தாய் சேவைகள் புரிந்திட பாவையே
பலநிலை கண்டு பாரினில் வாழ்ந்திடவே !

மகளாய் அவதரித்து ஈன்றெடுத்த இதயத்தை
இன்பத்தின் உச்சிதனை அடைய வைக்கிறாய் !
பேரின்பம் பெறுவர் பெற்றவரும் உன்னால்
காரிருளில் கண்ட கதிரவனாய் நினைத்தே !

வளர்கின்றாய் பருவங்கள் கடந்து மங்கையாக
தருகின்றாய் மகிழ்ச்சி தங்கத் தாரகையாக !
பகிர்கின்றாய் பாசத்தை அளவிலா இன்பமுடன்
காணுகிறாய் மணக்கோலம் காலத்தே நீயும் !

மறுவீடு செல்கிறாய் மருமகளாய் பெருமையுடன்
இருவீடு உறவுகளையும் இணைக்கிறாய் மகிழ்வோடு !
திளைத்திடும் இன்பமுடன் உழைக்கிறாய் இல்லாளாக
களைத்திடும் நேரத்தைக் கழிக்கிறாய் நினைவுகளுடன் !

மகப்பேறு நிலையடைந்து மகிழ்ச்சியில் மிதந்து
மழலையும் பிறந்து தாயாக உருவெடுக்கிறாய் !
குடும்பத்தின் குலவிளக்காய் திகழ்ந்து ஒளிரும்
குலமகளே யாதுமாகி நிற்கிறாய் நானிலத்தில் !

பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (27-Sep-16, 2:01 pm)
பார்வை : 1450

சிறந்த கவிதைகள்

மேலே