அமைதியில் மலரட்டும் திருநாள்

கொட்டடா எங்கணும் முரசம் - இந்தக்
. கொடும்பட் டாசொழிக வென்று - அடேய்
எட்டுதிக் கூதடா சங்கம் - வெடி
. யெடுப்பது நீங்குக வென்று !

பட்டா செரிப்பது தீது - அதைப்
. பணத்திற்கு விற்பது குற்றம் - எனுஞ்
சட்டம் பிறந்திடல் வேணும் - அதைச்
. சாற்றிடு மூடகம் வேணும் !

மதுவை யெதிர்த்திடும் மக்காள்- இங்கு
. மாசை யெதிர்த்திட வேண்டில் - வந்து
பொதுவில் பட்டாசுகள் மாயத் - தனிப்
. போரைநி கழ்த்தவே வாரீர் !

பட்டாசை நம்பிக்கு டும்பம் - இந்த
. நானிலத் துள்ளதே யென்றால் - ஊரில்
கெட்டதை நீக்கமாட் டீரோ ? - அது
. கெடுதலென் றுஞ்சகிப் பீரோ ?

அந்தோநம் பூமியும் பாவம் - அவள்
. அழகுற்ற மேனியில் தீயால் - வடு
தந்திடுத லாநமது நன்றி ? - இதைத்
. தானுணர்ந்தா லேது சோகம் ?

நாடோறும் புகைதன்னைக் கக்கி - இங்கு
. நாமோட்டிச் செல்கிறோம் வாழ்வை - இன்னும்
பாடாய்ப் படுத்துதல் நீதம் ? - மிகப்
. பாவம் இயற்கையுஞ் சாகும் !

ஆதலால் பட்டாசு வேண்டா - மக்கள்
. அமைதியில் மலரட்டும் திருநாள் - ஒரு
காதலால் நானிதைச் சொன்னேன் - கேட்டுக்
. கடமைகள் செய்தலே நன்றாம் !

-விவேக்பாரதி

எழுதியவர் : விவேக்பாரதி (28-Oct-16, 8:34 pm)
பார்வை : 72

சிறந்த கவிதைகள்

மேலே