ஹைக்கூ கவிஞர் இரா இரவி

ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
கவலை இல்லை
பாராட்டைப் பற்றி
குயில் !
வருத்தமில்லை
கருமை பற்றி
காகம் !
கர்வம் இல்லை
வெண்மை பற்றி
புறா !
விடிந்து வெகுநேரமாகி
கூவியது
சோம்பேறி சேவல் !
வானில் வட்டமிடும்
பருந்து
பயத்தில் குஞ்சுகள் !
வெட்ட வெட்ட
உயர்ந்தது
தென்னை !
அறிந்ததில்லை
இளநீரின் சுவை
தென்னை !
இரண்டையும் காணலாம்
என்றாவது ஒருநாள்
சூரியன் சந்திரன் !
மீண்டும் துளிர்த்தது
பட்டமரம்
மழை !
வகைகள் எத்தனை
வரையறுக்க முடியாது
மலர்கள் !
ரொட்டி
யார் போட்டாலும்
வாலாட்டும் நாய் !
குறைக்கும் நாய்
கடிக்காது பொய்
கடிக்கும் !
திரைகடல் ஓடி
திரவியம் தேடினால்
சுடுகிறான் சிங்களன் !
வேற்றுமையில் ஒற்றுமை
இந்தியா மட்டுமல்ல
இணைகளும்தான் !
உள்ளே அனுமதி இல்லை
மதிப்பு உண்டு
காலணி !
வேண்டாம்
சூடம்
சுற்றுச்சூழல் மாசு !
பெயருக்கு இல்லாமல்
காரணப் பெயராகட்டும்
அறங்காவலர் !
அறம் செய்ய
விரும்பினால் போதாது
செய்க அறம் !
சொல் செயல் சிந்தனை
அறம் இருந்தால்
சிறக்கும் வாழ்க்கை !
குப்பை கூட
நிலத்திற்கு உரமாகும்
மனிதன் ?
மக்காத மக்கும் குப்பை
வேறுபாடு தெரியாத
மக்காக மக்கள் !
நோயின்றி
நலமாக வாழ
நடைப்பயிற்சி !
.
உலகில் யாருமில்லை
எல்லாம் பொருந்திய
இணை !
சாதியில் இல்லை
எண்ணத்தில் உள்ளது
உயர்வு தாழ்வு !
விட்டுக்கொடுங்கள்
ஒழியும் வன்முறை
நிலவும் அமைதி !
உடைத்தே போடுகின்றனர்
நடுத்தர மக்கள்
முந்திரி !
கடைசித் திருமணம்
உணர்த்தியது
கடலைமிட்டாய் !
உடைந்து இருந்தால் கோபம்
உடைத்து உண்ணும்
அப்பளம் !
பெண்ணிற்கு மட்டும்
கற்பிக்கப்பட்ட கற்பனை
கற்பு !
--