தாவணிப் பெண்ணே

அடி தேரடி வீதிதேவதையே
உன் தாவணிக் காற்று தான்
என்னை சுக்கு நூறாக்கி
விட்டுச்செல்லுதடி..!!!

ஏனோ...
உன் தாவணியின் ஸ்பரிசம்
தேரடியோடு மட்டும்
தொலைந்திடுவதேனோ...!!?

இடை உரசும் சிகை அலசி
சொட்டுகின்ற நீரொடு
சுப்ரபாதம் பாடும் துளசிமாடத்
தென்றலே ...
என் வீட்டு துளசிமாடம் உனக்காய் வாடுதடி...!!!

நிலா பிழிந்து மின்னலொடித்து
முகச்சாயலில் சேர்த்திட்டே
இதழவிழ்க்கும் இவளழகில்
இளவழகி என தோன்றிடுமே
அடி அழகின் அமுதசுரபியே...!!!

இலக்கியத் தமிழன் பெண்மையை புனைவதிலே
பேனா முள் தேய்த்தானென்றால்
என்போல் ஓர் தாவணிக் காற்றில்
தன்னுயிர் தொலைத்திருப்பான் போலும்...!!!!

வானவில்லை உருக்கிவிட்ட
ஓடையிருந்து பிறந்துவிட்ட
ஒயில்குழம்பின் ஒட்டுமொத்தம்
என் உயிர் மொத்தம் உருக்குதடி...!!!

சிற்றிடையும் சற்றிறுக
இடையிருந்து விரிந்திடும்
உன் தாவணி பாவாடைதான்
மேலுரச மோட்சம் கொள்ளுமே மண்ணும்..!!!

என் மனமும் நீயின்றி மண்ணாக
உன் தாவணியின் தட்பவெட்பம் தந்துவிட்டுச் செல்லடி...!!!

வெள்ளோடை ஒடித்து விட்ட
உன் மெல்லிடையும்...
நன்னடையும்....
நெஞ்சுடையச் செய்யுதடி!!

அனுசரிப்புச் சரிகைத்தொட்டு...
விட்டுக்கொடுப்பில் விசிறி மடிப்பேற்றி...
முன்கோபத்தை முந்தானையென பின்விட்டு....
முன்னேறும் என் தாவணிப் பெண்ணே..........

என் உயிரின் மூச்சிக்கோர்ப்புகள்
உன் காதலிழைக்காய் காத்துக்கிடக்கின்றன...!!!!

சொல்லிவிடடி உன் இசைவுக்காய்
இயங்கமறுக்குதடி என் இதயம்.!!!!!

###சிவனிறைச்செல்வி

எழுதியவர் : சிவனிறைச்செல்வி (20-Dec-16, 10:39 pm)
சேர்த்தது : Sivaniraichelvi
பார்வை : 299

மேலே