அவமானதில் அரசியல்நிலை

இருநூறு ரூபாய் பணத்திற்கும்
ஒரே ஒரு பிரியாணி பொட்டலத்திற்கும்
வறண்ட நாக்கோடு கொளுத்தும் கொடும்வெயிலில்
உயிரையும் இழக்கத் தயாராகிப்போன ஒரு சமூகத்தில்
புரட்சி எப்படி வெடிக்கும்...?

அயோக்கியன் என்று தெரிந்தபின்னும்
அவனுக்கு ஆரத்தி எடுத்து
ஆரத்தித் தட்டில் விழப்போகும் சில்லரை பணத்திற்காக
பல்லிளித்து நிற்கும் ஒரு சமூகத்தில் மாற்றம் எப்படி சாத்தியம்...?

எத்தனை கொடுமைகள் இழைத்தாலும்
அதயெல்லாம் மறந்துவிட்டு
மீண்டும் மீண்டும் சின்னங்களை மட்டுமே பார்த்து வாக்களிக்கும்
ஒரு சமூகத்தில் மாற்றம் எப்படி நடக்கும்...?

படித்தவன் சூதும் பாவமும் செய்கிற சமூகத்தில்
முன்னேற்றம் எந்த வழியில் வந்து சேரும்...?

என் அப்பா அந்தக் கட்சி...
என் தாத்தா அந்தக் கட்சி...
”நாங்கள் பரம்பரை பரம்பரையாய் அந்தக் கட்சிக்குத்தான் ஓட்டுப்போடுவோம்”-என்று

அப்பன் வெட்டிய கிணற்றில் உப்புத்தண்ணீர் குடிக்கிற மகன்கள் இருக்கிறதேசத்தில்
புதிய மலர்ச்சி எப்படி உருவாகும்...?

நமது தாத்தனும், அப்பனும் பாடுபட்டு வளர்த்த கட்சி
கடைசியில் தலைவரின் குடும்ப சொத்தாகிப் போனதின் சூது தெரியாமல்
வாழ்க கோஷங்களை வாய்கிழிய எழுப்பும் மகன்கள்
இருக்கிற நாட்டில் மாற்றம் எப்படி சாத்தியம்...?

கட்சி எது...?
சின்னம் எது...?
தலைவர் யார்...?
எது சரியான பாதை...? - என்ற
அடிப்படை அரசியல் அறிவுகூட இல்லாத பொறியியல் பட்டதாரிகள் மலிந்த இளைய தலைமுறையினால்
மாற்றம் எப்படி வந்து சேரும்...?

தேர்தல் என்றால் ஒரு நாள் விடுமுறை என்று
வாக்குச்சாவடிக்கு செல்லாமல் விடுமுறை கொண்டாடுகிற தேசத்தில்
புதிய அரசு எப்படி சாத்தியம்...?

எமது மக்கள் எப்போதும்
தற்காலிக சுகங்களிலே நிறைவடைந்து விடுபவர்களாய் இருக்கிற வரையிலும்
நிம்மதியான வாழ்க்கையை வாழவே போவதில்லை...

எழுதியவர் : கௌதமன் நீல்ராஜ் (30-Dec-16, 9:18 am)
சேர்த்தது : கௌதமன் நீல்ராஜ்
பார்வை : 44

மேலே