விழிகளில் வழிந்தோடும்

உன்னால் விழிகளில் வழிந்தோடும் விழிநீர்
என்னால் வலிதாங்கா இதயத்தின் சுடுநீர் ..
அறிவாயா நீயும் அன்பின் எல்லையை
புரிவாயா புண்ணான நெஞ்சின் வலியை ....

ஏளனம் செய்கிறாய் ஏகாந்த நிலையிலும்
ஏனிந்த நிலையெனக்கு ஏறிட்டுப் பாராயோ ..
ஏமாற்றிடும் எண்ணம் எங்கிருந்து கற்றாய்
ஏங்குகிறேன் உன்னை நினைத்து எந்நாளும் ....

​ஆரம்ப ​காலத்தில் அலையவிட்டு மகிழ்ந்தாய்
ஆனால் இன்றோ அழவிட்டு ரசிக்கின்றாய் ..
ஆகாயமளவு காதலித்து அடிபணிந்து சென்றேன்
ஆசைகாட்டி மோசம் செய்யாதே என்னுயிரே ....

தவறென்ன நான் செய்தேன் செப்பிடுவாய்
தவமிருந்து கற்றேனே காதலை உன்னிடம் ..
தலைநிமிரா நிலையில் நீயின்று நிற்பதேனோ
தலைதாழ்ந்து பணிவுடன் கேட்கிறேன் நானும் ....

குணத்தில் ஏதேனும் குறையும் கண்டாயா
குமரிப் பெண்ணே திருவாய் மலர்ந்திடு ...
குலுங்கி அழுகிறேன் என்னுள்ளே எந்நேரம்
குடை இல்லாது மனம் நனைகிறது ....

பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (23-Feb-17, 8:07 am)
பார்வை : 414

மேலே