வான் மேகங்களே வசந்தத்தைத் தாருங்களேன் -- புதுக்கவிதை

வான் மேகங்களே
வசந்தத்தைத் தாருங்களேன் !
வசந்தகால நதிகளிலே
வைர மணி நீரலைகள் !
நீரலைகள் நிறைத்து விடும்
நெஞ்சார்ந்த நினைவலைகள் !!!


தாய் வயிற்றின் பனிக்குடமே !
தாய் மார்பின் பாலூற்றே !
மேகங்கள் ஒன்றுகூடி
மோகங்கள் கொண்டதனால்
வான் மழையும் பெய்ததுவோ !
வெண்மேகம் தருகின்ற
வெள்ளி நீர் அருவியே !!!


பூமி செய்த புண்ணியமே !
பொய்த்து விடா அற்புதமே !
நீரின்றி உலகுண்டோ !
நிலமின்றி நாமுண்டோ !
விளைநிலத்தின் விடிவெள்ளி !
விந்தையான வான் மேகம் !


உயிர்த் தாகம் போக்குகின்ற
உலகத்தின் அருமருந்தே !
விருந்தாக வருபவரை
வரவேற்கும் மழைநீரே !
எத்திக்கும் பொழியும்
எங்கள் உயிர் மேகமன்றோ !
வசந்தத்தின் வாயிலிலே
வான்மேகம் எழிலன்றோ !!!


ஆக்கம் :- பைந்தமிழ்ப் பாமணி . சரஸ்வதி பாஸ்கரன்

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (27-Mar-17, 8:38 pm)
சேர்த்தது : sarabass
பார்வை : 92

மேலே