ஆறோடும் நீரோடும்

ஆறோடும் நீரோடும்
கவிதை by : பூ.சுப்ரமணியன்


அன்று
வாடிய பயிரை
கண்டபோதெல்லாம்
வாடினார் வள்ளலார் !

இன்று
வளமான நீரின்றி
வாடிய பயிரைக் கண்டு
எண்ணி எண்ணி ஏங்கி
வாடி நிற்கிறான் விவசாயி !

வாடிய பயிருக்கு
எப்போது
ஆறோடும் நீரோடும் ?

அன்று
மண்ணோடும் மாட்டோடும்
மகிழ்ந்த விவசாயிகள்
இன்று
காவிரிநதி நீருக்காக
போராடி போராடி- அவன்
நிலங்கள் மட்டுமல்ல
அவன் வாழ்வும் வறட்சி !

பசி வந்தால் பத்தும்
பறந்து போகும் – அந்த
பசியாற்றும் விவசாயி
காஞ்ச வயிற்றோடு
காவிரிநதி நீருக்காக
கண்ணீரோடு போராடியும்
கைவிரித்தது கர்நாடகம் !

நாட்டில் ஓடும்
நதிகளெல்லாம் விரைவில்
தேசியமயமாக்கி
விதி கொண்டு வந்தால்
யாரோடும் கெஞ்ச வேண்டாம்
ஆறோடும் நீரோடும்
போராடும் விவசாயிகளின்
வாடும் முகம் மட்டுமல்ல
நாட்டு மக்களின் வாழ்வும்
விரைவில் மலரும் !

எழுதியவர் : பூ. சுப்ரமணியன் (27-Mar-17, 9:01 pm)
சேர்த்தது : பூ சுப்ரமணியன்
பார்வை : 86

மேலே