முதற்கனல்

கடலைத் தலைவனாகக் கொண்ட நீர்கள்
விண்ணகத்தின் மையத்திலிருந்து வருகின்றன
அனைத்தையும் தூய்மையாக்கி
அழியாதொழுகுகின்றன

விண்ணிலிருப்பவை, மண்ணில் பாய்பவை
வழிகளில் ஓடுபவை, ஊற்றெடுப்பவை
கடலை நாடுபவை
தூய்மையானவை, தூய்மை செய்பவை
அந்த நீர்களெல்லாம்
என்னை காத்தருள்க!

விண்ணகம் நடுவே வீற்றிருக்கும் வருணன்
மெய்யும் பொய்யும் அறிந்தவன்
அந்நீர்கள் இனிதாகப் பொழிகின்றன
தூயவை தூய்மையாக்குபவை.
தேவியரே அன்னையரே
என்னை காத்தருள்க!

நீரன்னையரின் நடுவே
இருக்கிறார்கள் வருணனும் சோமனும்
தேவர்கள் அங்கே
அவியேற்று மகிழ்கிறார்கள்
வைஸ்வாநரன் என்னும் நெருப்பு
அங்கே வாழ்கிறான்
நீரன்னைகள் என்னை காத்தருள்க!

அந்தப்பாடலின் இனிமையால் அவர்களனைவரும் ஒளிகொண்டனர் என்றாலும் அதன் பொருள் அவர்களுக்கு விளங்கவில்லை. பொருளறியாத பல்லாயிரம் வேதமந்திரங்களில் ஒன்றாகவே அது இருந்தது. என் தந்தை உரக்க “வானிலிருந்து மழைபொழிகின்றது என்று அறிவோம் முனிவர்களே. விண்ணகத்தின் மையத்திலிருந்து பொழிபவை எந்த நீர்கள்? நீருக்குள் வாழும் நெருப்பு எது?” என்றார்.

ஒவ்வொருவரும் ஒவ்வொன்றாக சொல்லத்தொடங்கினர். என் தந்தை “வேதம் முற்றுண்மை என்றால் அது பிரத்யக்‌ஷம் அனுமானம் சுருதி என்னும் மூன்று அறிதல்முறைகளாலும் நிறுவப்பட்டாகவேண்டும். இந்த மொழிவரிகள் முனிவர்கள் கருத்தால் கேட்ட விண்ணொலிகளை சுருதியாகக் கொண்டவை. ஆகவே அவற்றை நாம் அறிய முடியாது. உய்த்தறிதலோ முதலறிதலால் மட்டுமே நிகழமுடியும். ஆகவே முனிவர்களே ஐம்புலன்களாலும் இங்கே இப்போது நம்மாலறியப்படும் அறிதல் மட்டுமே வேதங்களை அறிவதற்கான மூலமாக அமையும்…அதைக்கொண்டு விளக்குக!”

ஒவ்வொரு விழியாகப் பார்த்துவந்த என் தந்தை “கிருஷ்ணா, நீ விளக்கு” என்று என் கண்களை நோக்கிச் சொன்னார். நான் எழுந்து “முனிவர்களே, யமுனையின் அடித்தட்டில் நூறுநூறாயிரம் முட்டைகள் பரவியிருப்பதைக் கண்டிருக்கிறேன். மீனின் முட்டைகள். புழுக்களின் முட்டைகள். நத்தைகள் சங்குகள் சிப்பிகளின் முட்டைகள். அவற்றையெல்லாம் விரியவைக்கும் வெம்மை எது?” என்றேன்.

அக்கணமே நான் சொல்லவருவதைப் புரிந்துகொண்டு முனிவர்கள் ‘ஆகா’ என்று சொல்லி எழுந்துவிட்டனர். “அந்த உயிர்நெருப்பின் பெயர் வைஸ்வாநரன் என்று அறிக! வானக மையத்தில் விண்மீன்களை விரியவைக்கும் அக்கினியும் அவனே. அங்கிருந்து வருகின்றன அன்னைநீர்கள்” என்றேன். “இது முதலுண்மை முனிவர்களே. இனி உய்த்துண்மை. நீரென்பது நீர்மையேயாகும். நீராகித் திகழும் விதிகளே நீரென்று அறிக! வைஸ்வாநரனால் முடிவிலா விண்மீன்கள் விரியச்செய்யப்படும் பெருவெளி விரிவைத் தழுவியும் ஓடுகின்றன அலகிலா நீர்மைகள்.”

‘ஆம் ஆம் ஆம்’ என முனிவர்கள் ஆமோதித்தனர். கண்வர் என் தந்தையிடம் ‘வாழ்நாளெல்லாம் வேதங்களைக் கற்ற நாம் அறியமுடியாத பொருளை இவன் எப்படி அறிந்தான் பராசரரே?’ என்றார். என் தந்தை ‘நாம் நூல்களில் வேதம் கற்றோம். அவன் கங்கையில் கற்றான். நூல்களின் ஏடுகளுக்கு முடிவுண்டு. கங்கையின் ஏடுகளுக்கு முடிவேயில்லை” என்றார். “முனிவர்களே, மலர்களில் தேன்அருந்திச் சிறகடிக்கும் வண்ணத்துப் பூச்சிக்குத்தான் வண்ணங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. தழை தின்னும் பசுவுக்கு அல்ல.”

“ஆம்” என்றார் கண்வர். “என் குருநாதராகிய நாரதர் சொன்னார். தும்பியின் நாதத்தை எழுதிவைக்க முயலாதே என. நாம் செய்தது அதைத்தான். வேதங்கள் கவிஞர் பாடியவை. மண்ணிலும், நதியிலும், மலரிலும், ஒளியிலும் முழுமையாக வாழ்ந்தவர்கள் அடைந்தவை. உடலில் மீன்வாசனையுடன் வரும் ஒருவனுக்காக அவை நம் நூல்களில் விரிந்து கிடந்திருக்கின்றன. இதோ வைஸ்வாநரன் விண்ணகநெருப்புடன் வந்துவிட்டான், அவன் வாழ்க!”

அன்று அந்த அவை என்னை ஆதரித்தது. வேதங்களைத் தொகுக்கும் பணியை என்னிடம் ஒப்படைத்தது. மூன்று பன்னிரண்டாண்டுகாலம் முயன்று நான் வேதங்களை சம்ஹிதையாக்கினேன். பாரதவர்ஷத்தின் நாநூறு வேதஞானிகள் எனக்கு மாணவர்களாக அமைந்தனர்.

அப்பணியைத் தொடங்கிய அன்று அஸ்தினபுரிக்குச் சென்றேன். அரண்மனையை அடைந்து பேரரசியைக் காணவேண்டுமென்று சொன்னேன். என்னை அந்தபுரத்துக்குக் கொண்டுசென்றார்கள். அங்கே வீட்டுவிலக்காகி திரைக்கு அப்பாலிருந்த என் அன்னையின் முன் நான் நிறுத்தப்பட்டேன். திரையை விலக்கி அவள் முன் சென்று அவள் காலடிகளைப் பணிந்து “அன்னையே உன் மைந்தன் இதோ வந்திருக்கிறேன். உன் ஆணை ஏதும் என் விதியே ஆகும்” என்றேன். குஹ்யஜாதையே, கொற்றவையின் கழல்கால்கள் போலக் கரியவை அவை. பத்துநகங்களும் கண்களாக மின்னும் அவற்றின் ஆசியைப்பெற்று மீண்டேன்.”

குஹ்யஜாதை மூச்சிழுத்து தலையை மெல்லத்தாழ்த்தி “இன்று நீங்கள் இவ்வனத்தில் இவ்வேளையில் ஏன் வந்தீர்கள்?” என்றாள். “இன்றுகாலை என் அன்னையின் ஆணையுடன் இளையோன் வந்தான். அன்னை அவனிடம் சொல்லியனுப்பிய அனைத்தையும் சொன்னான். பாவம், ஆணை என்ற சொல்லை மட்டுமே அவள் சொன்னால்போதுமென்று அவன் அறிந்திருக்கவில்லை” என்றார் மகாவியாசர்.

குஹ்யசிரேயஸ் சிறிய மணிக்கண்களுடன் முன்னால் வந்து “வியாசரே விதைக்குள் வாழும் அழியாநெருப்பு. இங்குள்ள அனைத்தையும் உண்டு வளர்வேன். நான் விராடன். நானே வைஸ்வாநரன். எனக்குள் என் குலத்தின் தலைமுறைகள் வாழ்கின்றன” என்றது.

“ஆம், அவை வாழ்க” என்றார் வியாசர். “பிறிதொருமுறை பிறிதொரு தருணத்தில் என் வழித்தோன்றல்கள் உங்களைச் சந்திப்பார்கள். அதற்காகவே என் அன்னையின் நெருப்பு என்னில் பற்றிக்கொண்டிருக்கிறது” என்றது குஹ்யசிரேயஸ். “இதோ அந்த நெருப்புக்கு நான் அவியிடுகிறேன்” என்றது சித்ரகர்ணி.

வியாசரின் கண்முன் சித்ரகர்ணி பொன்னிறப் பிடரிமயிருடன் எழுந்து நின்றது. அதன் காலடியில் குஹ்யசிரேயஸ் பணிந்து நிற்க அப்பால் குஹ்யஜாதை நின்று அதைப்பார்த்தது. சித்ரகர்ணி “உன் பசியடங்குவதாக. உன்னில் ஆற்றல் நிறைவதாக. என்னிலிருந்து அழியாநெருப்பு உன்னுள் நுழைந்து வாழட்டும்!” என்றது.

சுதாமனும் சுதனும் மரங்களில் ஏறி நோக்கி, புதர்களை விலக்கி வழியில்லாத காடுவழியாக அங்கே வந்து பார்த்தபோது முட்டி மோதி உறுமியபடி இறந்த சிம்மத்தைக் கிழித்துண்ணும் கழுதைப்புலிகளையும் மேலே சிறகடித்து எழுந்து அமர்ந்து கூச்சலிட்ட கழுகுகளையும் அப்பால் எம்பி எம்பி ஊளையிட்ட நரிகளையும் இன்னமும் உண்ணப்படாத சிம்மத்தின் திறந்த வெண்விழிகளையும் பார்த்தபடி அமர்ந்திருந்த வியாசரைக் கண்டார்கள்.

எழுதியவர் : (5-May-17, 9:03 pm)
பார்வை : 59

மேலே