கடவுளைக் காப்பாற்றுங்கள்
எப்படியாவது
கடவுளைக் காப்பாற்றுங்கள்!
இதோ
இந்த மனிதர்களிடம்..!
காசு காசுயென
லூசு போல் சுற்றும் சிலர்!
திடுக்கென
பணம் பதுக்கும் நாயகர்கள்!
அப்பழுக்கற்ற அரசியல்
அயோக்கியர்கள்!
கல்வியினை காசாக்கும்
சரஸ்வதி சகாக்கள்!
தேவைக்கு மட்டுமே
தேடும் சுயநலச் சுடர்கள்!
தடுமாறி விழும்போது
காலை வாருகின்ற சேவகர்கள்!
காமம் தலைக்கேறி
மிருகமாகும் மூடர்கள்!
தாயை விலை பேசும்
ஊழல் பெருச்சாலிகள்!
நீதியைக் கொச்சைப்படுத்தும்
முகத்திரை மனிதர்கள்!
உயிர்களைக் குடிக்கும்
கொடூர மிருகங்கள்!
சுதந்திரத்தை சூறையாடும்
வறட்டு மனிதர்கள்!
மது குடித்து
மதிமயங்கும் உத்தமர்கள்!
நன்றி மறக்கும்
நயவஞ்சக நரிகள்!
நிமிடங்கள் தோறும்
நிறம் மாறும் கூட்டங்கள்!
மன்றாடிக் கேட்கிறேன்...
இவர்களிடமிருந்து
எப்படியாவது
கடவுளைக் காப்பாற்றுங்கள்!