தடி ஊன்றும் எழுதுகோல் தொடர் கவிதைகள் 14--முஹம்மத் ஸர்பான்

131. பல கோடி கோளம் போடும் வானம்
இணை துணையற்ற இறைவன் அத்தாட்சி
132. பந்தை போல் சுற்றித் திரியும் உலகம்
காற்றில்லா பந்தை கேலி செய்கின்றது
133. தொடுவான் நோக்கி நகரும் பறவைகள்
நியூட்டனின் ஈர்ப்பு விதியை பரிசோதிக்கின்றன
134. நட்சத்திரங்கள் இல்லாத வான்நிலவை போல்
சொந்தங்கள் இல்லாத விதவை வாழ்க்கை
135. விலை கொடுத்து வாங்கப்படும் பதவிகள்
திறமைகளை கருணைக் கொலை செய்கிறது
136. மனிதனின் அழுக்கடைந்த மனதைக் காட்டிலும்
பறவைகள் போடும் எச்சங்கள் தூய்மையானது
137. வறுமையிலும் எழுதும் கவிஞனை பார்த்து
பசியும் பட்டினியும் நாளாந்தம் பரிதாப்படுகிறது
138.ஒவ்வொரு பூவும் தனித்துவமானது
விதியின் நகர்வும் விசித்திரமானது
139. தொலைந்த பொருளை தேடி அலைகையில்
தேடும் வாழ்க்கை தொலைந்து போகிறது
140. வாழ்க்கை தொடங்கியது கருவறையில்
வாழ்க்கை ஆய்வாகிறது கல்லறையில்