மதுவில் மூழ்கும் மதியே

விளக்கைத் தேடும் விட்டிலின் வாழ்வு
விளக்கிலே முடிவது போல - குடிப்
பழக்கத்தில் மூழ்கும் மனிதனின் நிலையும்
போதைக்கு அடிமை மறவாதே!

கலையிற் சிறந்த நல்லோர் வாழ்வும்
தடம்மாறிப் போனது குடியாலே - அவர்
தனைமறந்து தரமிழந்து தடுமாறி வீழ்ந்ததும்
தள்ளாட வைக்கும் மதுவாலே!

மலையளவு செல்வமும் மங்காத பெரும்புகழும்
மதுவினால் மாறிடும் நொடிப்பொழுதில் - கேட்டை
விலைகொடுத்து வாங்கிடும் கெடுமதி வாழ்வினில்
வேதனையைச் சேர்த்திடும் உணர்மனமே!

குணநலம் போற்றும் சான்றோர் பார்வையில்
குடிமகனைப் போலோர் அற்பனில்லை! - நல்ல
மதிநலன் கொண்டோர் மதுவின் பாதையில்
மறந்தும் செல்லத் துணிவதில்லை!

எழுதியவர் : குழலோன் (11-Jul-17, 8:30 am)
பார்வை : 102

மேலே