பகலில் - இரவைச் சுவீகரித்தவன் நீ

உன் அதிகாரக்
கருங் கொற்றக் குடையில்
(வெண் கொற்றக் குடை அல்ல!)
ஓட்டைகள் நிறைய.

மழைநீர் விழுந்து
சாக்கடையிலும்
சமுத்திரத்திலுமாய்
சங்கமித்தன.

உன் முன்னோர்களே
தேக்கங்களை
நீக்கங்கள்
செய்துவிட்டனர்.

உன் சிம்மாசனத்தைக்
காத்துக் கொள்ள
சிரசாசனம்
செய்ய வேண்டியுள்ளது.

குப்பைகளும், துர்நாற்றமும்
உன் மூக்குக்கு
வாசனையானது.

இணைப்பு என்பது
உன்னைக் காப்பாற்ற
இன்னும் இன்னுமாய்
சொத்துச் சேர்க்க.

அதிகார போதையில்
தள்ளாடுகிறாய்
தடுமாறுகிறாய்.

நிமிர்ந்தும், ஓங்கியும்
பேசி
உன் உள் உதறலை
மறைக்கப் பார்க்கிறாய்.

ஆட்டம் தொடங்கினால்
முடிவதுதானே விதி.
முடியப் போகிறது;
முடியும்,
விடியும்...

எழுதியவர் : கனவுதாசன் (20-Aug-17, 10:38 am)
பார்வை : 64

மேலே