இளைஞர் வாழ்க
என் கல்லூரியில் இன்று இணைந்திருக்கும் முதலாமாண்டு மாணவர்களுக்கு மூத்த(இரண்டாமாண்டு) மாணவனான நான் மனதாரப் பாடிய வரவேற்புக் கவிதை....
இளமை கொண்டவர்கள் வாழ்கவே - வாழ்கவாழ்க
இளமை கொண்டவர்கள் வாழ்கவே !
வளமை ஆக்கவந்த மக்களாம் - வாழ்கவாழ்க
வலிப டைத்தவர்கள் வாழ்கவே !
கனவு காணுங்கண்கள் வாழ்கவே - உயருதற்குக்
கடமை ஆற்றுங்கைகள் வாழ்கவே !
மனதில் அச்சமற்ற வீரர்கள் - பூமியெங்கும்
மணம்ப ரப்பிநீடு வாழ்கவே !
வேட்கை கொண்டநெஞ்சர் வாழ்கவே - சூழுகின்ற
வேத னையெரித்து வாழ்கவே !
பாட்டி சைக்ககுமிதழ்கள் வாழ்கவே - கல்விகற்று
பாரு யர்த்தும்வர்க்கம் வாழ்கவே !
காதல் பேணுமக்கள் யாவரும் - இன்பமுற்று
கவிதை போலமண்ணில் வாழ்கவே !
நீதி நேர்மைகொண்டு வாழ்ந்திடும் - இளைஞரென்றும்
நீடு வாழ்கவாழ்க வாழ்கவே !
எச்ச ரிக்கைகொண்ட மானுடர் - நல்லவார்த்தை
எழுத மண்ணில்நன்கு வாழ்கவே !
மெச்சு தற்குமுரிய சக்தியாம் - இளைஞரென்னும்
மேன்மை யாளர்வாழ்க வாழ்கவே !
-விவேக்பாரதி