முரண் நூல் ஆசிரியர் அருட்தந்தை கவிஞர் லொயோலா நூல் விமர்சனம் கவிஞர் இரா இரவி

முரண் !

நூல் ஆசிரியர் : அருட்தந்தை கவிஞர் லொயோலா !

நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

வெளியீடு : பாலா & மாலா பதிப்பகம், 1/2, புதிய காலனி, குரோம்பேட்டை, சென்னை-600 044. 70 பக்கங்கள் விலை : ரூ. 50
*****
அட்டைப்பட வடிவமைப்பு, உள்அச்சு பொருத்தமான படங்கள் என அச்சிட்டு பதிப்பித்த பாலா & மாலா பதிப்பகத்திற்கு பாராட்டுகள். நூல் ஆசிரியர் கவிஞர் லொயோலா அவர்கள் சகலகலா வல்லவராக உள்ளார். அவரது ‘திசையாகும் திருப்பங்கள்’ நூலிற்கு அணிந்துரை எழுதி இருந்தேன். அந்த நூல், தன்னம்பிக்கை விதைக்கும் கட்டுரை நூல். இந்த நூல் முரண் கவிதை. இறைப்பணியோடு இலக்கியப் பணியும் செய்து வரும் பண்பிற்கு முதல் பாராட்டு.
இனிய நண்பர் வித்தகக் கவிஞர் பா. விஜய் அவர்களின் வாழ்த்துரை, தஞ்சைப் பல்கலைக்கழக எழுத்தாளர் இரா. காமராசு அணிந்துரை நூலின் வரவேற்பு தோரண வாயில்களாக வரவேற்கின்றன.
ஆசிரியர் என்னுரையில் அம்மா திருமதி குழந்தை தெரஸ் அவர்களுக்கும், இனிய நண்பர் முனைவர் முதுநிலைத் தமிழாசிரியர் ஞா. சந்திரன் உள்ளிட்ட பலருக்கும் நன்றியினைப் பதிவு செய்திருப்பது சிறப்பு.
சிவகாசிச் சிறுவர்களின் சிதைந்து போன கல்வி பற்றிய நிகழ்வை கவிதையால் காட்சிப்படுத்தி வெற்றி பெறுகின்றார்.
சிதைந்த கனவுகள்!
வானத்திலே வான வேடிக்கை / பூமியிலே புஸ்வானம் / சாலையில் சரவெடி / சங்கு சக்கரமாய் /
சுழற்சிகள் மனத்தினுள் / சிதைந்த கதவுகள் மலருமா? /
என் போன்ற / பிஞ்சுக் குழந்தைகளுக்கு!
இக்கவிதையினைப் படித்த போது, இதே கருப்பொருளில் நான் எழுதிய் ஹைக்கூ கவிதை நினைவிற்கு வந்தது.
வெடித்துச் சிதறியது
சிவகாசிச் சிறுவர்களின்
வாழ்க்கையும் தான்!
நூலாசிரியர் அவர்களுக்கு இயற்கையின் மீது, சுற்றுச்சூழல் மீது மிகுந்த அக்கறை உள்ளது. சுற்றுச் சூழலை அதிக மாசுபடுத்துவதன் காரணமாகவே ஓசோன் படலத்தில் ஓட்டை விழுந்து வெப்பமயம் அதிகரித்து வருகின்றது. அவற்றை உணர்த்தும் வண்ணம் வடித்த கவிதை நன்று.
ஓசோன் படலம் / ஓட்டை !! /
நவ நாகரீக மனிதனின் கைவண்ணம் !
இறைப்பணி செய்யும் அருட்தந்தையாக இருப்பதால் இறைவன் பற்றிய கவிதைகளும் நூலில் இடம் பெற்றுள்ளன. எனக்கு இறைநம்பிக்கை இல்லாததால் அவற்றை மேற்கோள் காட்டவில்லை.
மழை, இடி, மின்னல், கடல் அலை இவைகள் மக்களுக்காக குமுறுவதாகக் கற்பனை செய்து வடித்த கவிதை நன்று.
இயற்கை குமுறுகிறது !
வானமே / ஏன் அழுகிறாய் / சமுதாய வன்கொடுமைக்கு
இரையாகும் / அப்பாவி / அடித்தட்டு மக்களின் /
அவல நிலையையும் / சுருங்கிப் போன / வயிற்றையும் / சுருக்கில் தொங்கும் விவசாயியையும் கண்டா?
விவசாயிகளின் தற்கொலைக்கு ஆட்சியாளர்கள் வருந்தாவிட்டாலும், வானம் வருந்து கண்ணீர் வடிக்கின்றது என்றா கற்பனை நன்று. இயற்கைக்கு இருக்கும் இரக்கம் கூட மனிதர்களுக்கு இல்லை என்பதை நன்கு உணர்த்தி உள்ளார். பாராட்டுகள்.
இன்றைய இளைஞர்களுக்கு தன்னம்பிக்கை விதைக்கும் விதமாக பல கவிதைகள் உள்ளன. அவற்றில் பதச்சோறாக உங்கள் பார்வைக்கு.
மனதை விசாலமாக்கு!
தோழனே தோழியே ! / இறுக்கமான வாழ்க்கை /
இறுகிப் போன மனது / சுருங்கிப் போன இதயம் /
தெளிவற்ற சிந்தனை / வாழ்க்கையில் விரக்தி /
வெறுப்புகள் பல / நாள்தோறும் !
மனதை விசாலமாக்கு /
இதயத்தை மென்மையாக்கு / உள்ளத்தைத் தாராளமாக்கு /
பிறக்கும் மகிழ்ச்சி / உன் வாழ்க்கையில் !
கவலைகளை மறந்து குறுகிய சிந்தனைகளை விடுத்து விசாலமாக சிந்தித்தால் வாழ்க்கை வளமாகவும் நலமாகவும் அமையும் என்பதை கவிதையில் நன்கு உணர்த்தி உள்ளார் பாராட்டுகள்.
தமிழகத்திற்கு அண்டை மாநிலங்கள் செய்து வரும் வஞ்சகம் கண்டு நெஞ்சகம் பொறுக்காமல் கவிதை வடித்துள்ளார். அருட்தந்தை என்பதையும் தாண்டி தமிழர்களின் உரிமைக்காக உரக்கக் குரல் தந்துள்ளார். மகாகவி பாரதியார் போல ரௌத்திரம் பழகி வடித்த கவிதை நன்று. பாராட்டுகள்.
தமிழா தலை நிமிர்வது எப்போது?
குடிக்கத் தண்ணீருக்காக / ஆந்திரா, கேரளா, கர்நாடகா
நோக்கி கூக்குரலிடுகிறாய்? தண்ணீர் தண்ணீர் என்று / அவர்களோ உன்னை உயிரோடு உறிஞ்சுவதிலே /
குறிக்கோளாய் இருக்கிறார்கள். தரத்தோடு வாழும் தமிழா!
நீ தலை நிமிர்வது எப்போது? / நீ குட்டக் குட்டக் குனிவதால் உன்னைக் குட்டிக் கொண்டு இருக்கிறார்கள் /
அரசியல் பகடைக் காய்களாக / உன்னை ஆட்டுவிக்கிறார்கள்
நீ விழித்தெழுவது எப்போது? இப்பாரினில் மானம் உள்ள தமிழனாய் தலை நிமிர்ந்து வாழ்வது எப்போது?

உலகில் பிறந்த மனிதர்கள் எல்லோரும் மாற்றம் வேண்டும் என்கிறோம். ஆனால் பிறரிடம் மாற்றம் எதிர்நோக்கும் நம்மிடம் மாற்றம் வர சம்மதிப்பதே இல்லை. அதற்கு விடை சொல்லும் விதமாக வடித்த கவிதை நன்று.
மாற்றம்!
மாற்றம் ! மாற்றம் ! மாற்றம் ! மாற்றத்திற்காக ஏங்கும் அன்பே
மாற்றத்தை உன்னிலிருந்து முதலில் தொடங்கு /
இல்லையேல் / உன்னில் எழுவது ஏமாற்றமே !

இறுதி மூச்சு வரை தமிழ் சமுதாயத்தின் எழுச்சிக்காக
உழைத்த மாமனிதர் தந்தை பெரியார் சொன்ன வைர வரிகள் நினைவிற்கு வந்தன.
“உன்னை பிறர் எப்படி மரியாதையாக நடத்த வேண்டுமென்று எதிர்பார்க்கின்றாயோ? அது போலவே நீ பிறரை மரியாதையாக நடத்து”.
இயேசுவின் வாசகத்தில் சொல்வதென்றால் உன்னைப் போலவே பிறரையும் நேசி. நூல் முழுவதும் மனிதநேயம் விதைக்கும் விதமாக பல கவிதைகள் உள்ளன. பொதுநலம் பேண வேண்டுமென்ற கருத்தையும் கவிதைகளில் வடித்து உள்ளார்.
எல்லாம் கடந்து!
சுயநலம் கடந்து / தன்ன(ழி)ளித்து / பிறர் வாழ
வாழ்வதும் / வீழ்வதுமே / சிறப்பு.
ஆம் பிறருக்காக வாழ்ந்த மாமனிதர்கள் காமராசர், கக்கன், அப்துல்கலாம் போன்றவர்கள் இறந்து பல வருடங்கள் ஆன போதும் இன்றும் மக்கள் நினைந்து பாராட்டுகின்றனர். தன்னலமறந்து பிறர் நலம் பேணியவர்கள் இறந்தபின்னும் வாழ்கிறார்கள் என்பது முற்றிலும் உண்மை. இதுபோன்ற பல சிந்தனைகளை மலர்வித்தது கவிதை.
மதம், மனிதனை நெறிப்படுத்த படைத்ததாகச் சொன்னார்கள். ஆனால் இன்று மதம் மனிதனை வெறிப்படுத்தவே பயன்படுகிறது. உலகம் முழுவதும் நடக்கும் வன்முறைக்கும், படுகொலைகளுக்கும் காரணம் மதவெறி. பண்படுத்தப் படைக்கப்பட்ட மதம் இன்று புண்படுத்தும் வேலையை செய்து கொண்டு இருக்கின்றது. மதம் ஒரு அபின் என்றார் லெனின். அவர் கூற்றை இன்றைக்கும் மெய்ப்பிக்கும் மனிதர்களைக் காண்கிறோம். மதம் பற்றிய கவிதை சிந்திக்க வைத்தது.
மதம்!
பூசாரிகளின் வயிற்றுப் பிழைப்பு / அரசியல்வாதிகளின் பகடைக்காய்கள் / வியாபாரிகளின் முதலீடு / அன்றாடங்காய்ச்சிகளை ஏமாற்றும் போதைப் பொருள் /
வன்முறைகள் / பகையுணர்வு / ஒற்றுமையின்மை / தலைவிரித்தாடுகிறது / மதத்தின் பெயரால் /
மதம் பிடித்த யானையை அடக்கலாம் /
மதம் பிடித்த மனிதனை அடக்குவது கடினம்
மதப்பற்று வேண்டும் / மதவேறி வேண்டாமே!
மதத்தின் பெயரால் மோதல்கள் வேண்டாம். மதத்தை விட மனிதமே பெரிது என்பதை கவிதையால் உணர்த்தியது சிறப்பு.
நூல் ஆசிரியர் அருட்தந்தை ஆ.லொயோலா அவர்கள் ஒரு மத போதகர் என்ற போதிலும் மனிதனுக்கு மதப்பற்று இருக்கலாம். ஆனால் மதவெறி இருக்கவே கூடாது என்று எல்லா மனிதர்களுக்கும் அறிவுறுத்தியது சிறப்பு. பாராட்டுகள். தொடர்ந்து எழுதுங்கள்.


--

.

எழுதியவர் : கவிஞர் இரா. இரவி (25-Aug-17, 9:29 am)
சேர்த்தது : கவிஞர் இரா இரவி
பார்வை : 254

சிறந்த கட்டுரைகள்

மேலே