அனிதா எனும் அணையா விளக்கே

அவசரப்பட்டு
அணைந்துவிட்டது
அனிதா எனும்
அகல் விளக்கு !

ஆம் சகோதரி
நீ கொஞ்சம்
நிதானித்திருக்கலாம் !

உன்னால் ஓராயிரம்
விளக்குகள்
ஒளி பெற்றிருக்கும்

நீ கொஞ்சம்
அவசரப்பட்டு விட்டாய் !

உடல் நோய்க்கு
மருத்துவம் கற்க
முடியாமலா உன்
உயிரை மாய்த்துக்கொண்டாய் !

அப்படியானால்
இங்கே படிந்திருக்கும்
கலப்படக் கறைகளை
யார் களைவது ?

லஞ்ச ஊழல்களை
யார் வேரறுப்பது ?

சாதி அரசியலுக்கு
யார் சாவுமணி அடிப்பது !

இணைய வெளிச்சத்தில்
தொலைந்துவிட்ட
இளைய தலைமுறையை
யார் தட்டி எழுப்புவது ?

அறுக்கப்பட்ட தாலிகளையும்,
பறிக்கப்பட்ட உயிர்களையும்,
சூறையாடப்பட்ட கற்பையும்
அப்படியே மறந்துவிடலாமா ?

அடுத்த தலைமுறையும்
அடிமையாகத்தான்
வாழ வேண்டுமா ?

அச்சடித்த நோட்டுக்கள்தான்
நம்மை ஆள வேண்டுமா ?

இல்லை !

நாறிக்கிடக்கும் சமூகத்தை
நாம்தான் மாற்ற
வேண்டும் !

நோய்க்கு மருந்தும் ,
அறிவுக்கு விருந்தும்
நாமே ஆக வேண்டும் !
நம்மை நாம்தான்
ஆள வேண்டும் !

இனியொரு அனிதாவை
நாம் இழக்க கூடாது !

இனி புதிதாய் பிறப்போம் !
புது யுகம் படைப்போம் !
தமிழினமே இனியாவது
தலை நிமிர்ந்து வாழ்வோம் !

எழுதியவர் : நெட்டூர் மு.காளிமுத்து (3-Sep-17, 2:09 pm)
சேர்த்தது : காளிமுத்து
பார்வை : 162

மேலே