காந்திக்கு ஒரு கடிதம் கவிஞர் இரா இரவி

காந்திக்கு ஒரு கடிதம்!

கவிஞர் இரா. இரவி
மறுபிறவியில் எனக்கு நம்பிக்கை இல்லை
மறுபடியும் நீ வருவாய் என நம்பிக்கை இல்லை !

ஆர்வம் மிகுதியில் சிலர் அழைக்கின்றனர்
அண்ணலே நீ மறுபடியும் வர வேண்டாம் இங்கு !

செய்யக்கூடாது என்று சொன்ன ஏழு பாவங்களையும்
செய்து வருகின்றனர் நாட்டில் உள்ள மக்கள் !

கொள்கையற்ற அரசியல் கூடாது என்றாய்
கொள்ளையடிப்பதே கொள்கை என்றானது அரசியல் !

உழைப்பற்ற செல்வம் கூடாது என்றாய்
உழைக்காமலே குறுக்குவழியில் செல்வம் சேர்க்கின்றனர் !

நெறியற்ற வாணிபம் வேண்டாம் என்றாய்
நெறிதவறிய வாணிபமே எங்கும் நடக்கின்றது !

பண்பாடற்ற கல்வி கூடவே கூடாது என்றாய்
படிக்கும் மாணவன் ஆசிரியையே கொல்கின்றான் !

மனசாட்சியற்ற மகிழ்ச்சி வேண்டாம் என்றாய்
மனசாட்சியையே மதிக்காமல் மகிழ்ச்சியில் வாழ்கின்றனர் !

மனிதாபிமானமற்ற அறிவியல் கூடாது என்றாய்
மனிதர்களே இயந்திரமாக மாறி வருகின்றனர் !

தியாகமற்ற வழிபாடு வேண்டாம் என்றாய்
திரும்பிய பக்கமெல்லாம் வழிபாடு வியாபாரமானது !

நீ சொன்ன விரதங்களையும் கடைபிடிக்கவில்லை
நீ சொன்ன பாவங்களையும் வாழ்வில் நீக்கவில்லை !

சமூக நல்லிணக்கம் வேண்டுமென வலியுறுத்தினாய்
சாதிமதச் சண்டைகளால் சாந்தி காணாமல் போனது !

வெள்ளையரை வெளியேற்ற அகிம்சையால் போராடினாய்
வெள்ளையர் கொள்ளையடிக்க சிவப்புக்கம்பள வரவேற்பு !

உப்புக்கு வரியா? என்று உணர்ச்சியோடு எதிர்த்தாய்
உதடு பேசினால் இனி வரி வசூலிப்பார்கள் இங்கு !

உலக நாடுகள் எல்லாம் உன்னை உணர்ந்தது
உலகமெங்கும் உன் சிலைகள் உன் தபால்தலைகள் !

பணத்தாளில் மட்டும் உன் படத்தை அச்சடித்துவிட்டு
பாரதத்தின் தந்தை உன்னை மறந்து விட்டோம், வர வேண்டாம்!
.

எழுதியவர் : கவிஞர் இரா. இரவி (4-Oct-17, 9:02 am)
பார்வை : 188

மேலே