ஆயிரங் கதைகள்
வலி என்பதே வாழ்வின் எச்சம்
மனிதர் வாழ்வில் வாதையே மிச்சம்
புலி நடை போட்டு புரிந்திட முயன்றும்
போதனை தருமோ நதிக்கரை ஞாபகம்..
பச்சை வெளியிடை மூலிகை வனத்திடை
பயணம் செய்யும் நதியின் பொருளை
மொச்சு மொச்செனப் புல்லை மேய்ந்து
தாகம் தணிக்கும் விலங்குகள் அறியுமோ?
நதியதன் நீரையே நம்பி வாழ்ந்து
பணப்பயிர் தன்னை விதைத்து அறுக்கும்
விதியிற் சிக்கிய உழவர் பாட்டை
கரைகளில் குருவிகள் கொத்திப் பறக்கும்
பளிங்கிற் கட்டிய கல்லறைக் கோயிலும்
களிம்பு மஞ்சள் தடவிய நடு கல்லும்
மட்டைப் பந்து ஆடிடும் சிறார்க்கு
எட்டிய கருவியாய் இழிந்து கிடக்கும்.
இதயத்தில் பயத்தின் ரேகையே இன்றி
உதயத்தை நோக்கும் சேவல் பார்வையில்
தாழ்வையும் உயர்வையும் துகள்கள் ஆக்கி
வாழ்க்கை வெள்ளி மண்ணெனக் கரையும்
புதிராம் மங்கை மனதைப் போலவே
நதிகள் ஓடிட கரைகளில் நிகழ்வதை
ஒடிசலான அந்த ஒற்றைப் பனையே
ஆடிச் சொல்லிடும் ஆயிரங் கதைகள்