சிநேகிதனே -அத்தியாயம் - 12

....சிநேகிதனே....

அத்தியாயம் : 12

அவன் பேசி முடித்துவிட்டான்...இதுவரை நேரமும் என்னைக் கேட்ட கேள்விகளுக்கும்,எனக்குள் சிக்கித் தவித்துக் கொண்டிருந்த கேள்விகளுக்கும் அவனே பதிலளித்தும்விட்டான்...

அவனது வாழ்க்கையில் தோழியாக,காதலியாக மட்டுமே இடத்தைப் பிடித்துக் கொண்ட நான் இன்று அவன் முன்னே அவனது மனைவியாக நின்று கொண்டிருந்தேன்...அவன் முன்னே என்பதை விடவும் எனக்கு நானே அறிமுகமாயிருந்தேன் அவனது மனைவியாக...

என் எதிரில் இருந்த நிலைக் கண்ணாடியில் என்னை நானே பார்த்துக் கொள்ளவில்லை....அவனது உதடுகள் உச்சரித்த ஒவ்வொரு வார்த்தைகளிலும் அவனது காதலைக் கண்டு கொண்டேன்...அந்தக் காதலில் இருந்த ஆழத்தை அவனது பார்வையில் உணர்ந்து கொண்டேன்...

இவ்வளவு நேரமும் அந்தக் காதலை எங்கேதான் ஒளித்து வைத்திருந்தானோ..??அவனிடம் நான் என்றோ அடிமையாகிவிட்டேன்...ஆனால் அடைக்கலமாக விடாதுதான் என்னை என் சூழ்நிலை தடுத்து நிறுத்தியிருந்தது...

ஆனால் இன்று அந்த தடைகள்,தடுமாற்றங்கள்,எனக்குள்ளிருந்த தயக்கங்கள் அத்தனையையும் அவன் உடைத்து நொறுக்கிவிட்டான்...அவனது காதலால் அனைத்தையையும் ஒன்றுமில்லாததாய் ஆக்கிவிட்டான்...

இதற்கு மேலும் அவனை விட்டு விலகிச் செல்ல என்னால் முடியுமா...??இல்லை எனக்காக...என் காதலுக்காக காத்திருந்தவனின் காதலை நிராகரிக்கத் தான் முடியுமா...??அவனை விட்டு இனி ஒரு அடி கூட என்னால் எடுத்து வைக்க முடியாதே..

அவன் அந்தக் கண்ணாடி முன் நிறுத்தி என்னையே எனக்கு அறிமுகம் செய்து வைத்த போதே உறைந்து விட்ட நான்...அவனின் ஒவ்வொரு வார்த்தைகளிலும் கண்ணீரில் கரைந்து கொண்டிருந்தேன்...முதன் முறையாக என் அழுகையை நான் கட்டுப்படுத்திக் கொள்ள விரும்பவில்லை...

விழியில் வழிந்து கொண்டிருந்த கண்ணீரோடே அவனைத் திரும்பிப் பார்த்த நான்...அதற்கு மேலும் ஓர் விநாடியைக் கூட தாமதிக்க விரும்பவில்லை....பொங்கி எழுந்த அழுகையோடே அவனை ஓடிச் சென்று அணைத்துக் கொண்டேன்...

என் இத்தனை கால வலிகளையும் அவனில் கரைக்கத் தொடங்கினேன்...அவனும் என்னை மெது மெதுவாய் அணைத்து அவனுக்குள் என்னை புதைத்துக் கொண்டான்..

எனக்கு வார்த்தைகள் வெளிவர மறுத்தது...அழுகை மட்டுமே அங்கே வசனம் அமைத்துக் கொண்டிருந்தது..எவ்வளவு நேரம் அவனுள்ளேயே நின்றேன் என்று தெரியவில்லை...என் அழுகை கொஞ்சம் கொஞ்சமாய் அடங்க என் அணைப்பை லேசாக விடுவித்துக் கொண்ட நான்,அவன் நெற்றியோடு என் நெற்றியை வைத்து அவனோடு ஒட்டிக் கொண்டேன்...

அந்த நிலையிலேயே சில மணித்துளிகள் மௌனமாய் கழிய என் மனதை அவனிடம் எந்த ஒளிவு மறைவுமின்றி திறந்து காட்டத் தொடங்கினேன்...

"உன்னை....உன்னை ரொம்ப கஸ்டப்படுத்திட்டேன் ல சரண்....என்னை மன்னிப்பியா....??.."

என் உதட்டில் விரலை வைத்து அதற்கு மேல் என்னை பேச விடாமல் தடுத்தவன்,

"நான்தான் உன்கிட்ட மன்னிப்பு கேட்கனும் மித்ரா...இன்னைக்கு உன்னை ரொம்பவே காயப்படுத்திட்டேன்...உன் வாயாலயே நீ காதலை ஒத்துக்கனும்னுதான் அப்படியெல்லாம் பேசினேன்...உனக்கு எவ்வளவு வலிச்சிருக்கும்..."

என்றவாறே கண்கள் கலங்க நின்றவனைப் பார்த்த போது இனிவரும் காலமெல்லாம் அவனொருவனே எனக்குப் போதுமென்று தோன்றியது...

இதுவரை காலமும் சாபம் மட்டுமே வாங்கி வந்ததாக நினைத்துக் கொண்டிருந்த நான்,அவனையே வரமாக வாங்கி வந்ததை அறியாத பேதையாக இருந்ததை எண்ணி என்னை நானே நொந்து கொண்டேன்...

அவன் கண்களை விரல்கள் கொண்டு துடைத்த நான்,

"என்னைக் காதலிக்கிற உரிமை மட்டுமில்லை....என்னைக் காயப்படுத்துற உரிமை கூட உனக்கு மட்டும்தான்டா இருக்கு..."

"உன்னோட வார்த்தைகள் ஒவ்வொன்னும் எனக்குள்ள வலியை ஏற்படுத்தினது உண்மைதான் சரண்...ஆனால் என்னை விடவும் உனக்குத்தான் அதிகமா வலிச்சிருக்கும்..."

"உண்மைதானே...??.."என்றவாறே அவன் கன்னத்தை ஒரு விரலால் பிடித்துக் கொண்ட நான் அவனைக் காதலோடு நோக்கினேன்...

அவன் கன்னத்தில் பதிந்திருந்த என் கரத்தை மென்மையாகப் பற்றிக் கொண்டவன்,என் தலையை அவன் மார்போடு சேர்த்து அப்படியே என்னை இறுக்கமாக அணைத்துக் கொண்டான்..

என் கேள்விக்கான பதிலை அவன் அணைப்பு சொல்லாமல் சொல்லியது...அவன் மௌனமாய் வடித்த கண்ணீர் அவனது வலியினை எனக்குள் உணர்த்திக் கொண்டது...இத்தனை காலமும் ரணமாய் கொதித்துக் கொண்டிருந்த உள்ளம் அவனது அணைப்பில் அடங்கிப் போனது...

அவன் அணைப்பில் இருந்தவாறே என் பேச்சைத் தொடர்ந்தேன்...

"இப்படியொரு நாள் வரும்னு நான் கனவில கூட நினைச்சுப் பார்த்ததில்லை சரண்...உன்னுடைய காதல் எனக்கு மறுபடியும் கிடைக்கும்,எனக்காக நீ காத்திட்டிருப்ப...இது எதையுமே நான் எதிர்பார்த்ததில்லை..."

"கடந்து போன அந்த நாலு வருசமும் மறுபடியும் வருமான்னு தெரியல...ஆனால் அந்த நாலு வருசத்துக்கும் சேர்த்து இப்போ உன்னோட காதல் எனக்கு கிடைச்சிருக்கு...இது ஒன்னே இந்த வாழ்க்கை மொத்ததுக்கும் எனக்குப் போதும் சரண்..."

"இப்போ கூட எனக்கு ஏதோ கனவில மிதக்குற மாதிரியேதான் இருக்கு...உன்னால எப்படிடா என்னை இவ்வளவு காதலிக்க முடியுது...??.."என்றவாறே அவனை நிமிர்ந்து நோக்கினேன்...

என் முடிகளை மென்மையாய் ஒதுக்கி காதோரமாய் விட்டவன்,அவனது கரங்களால் என் முகத்தினைத் தாங்கிக் கொண்டான்...

"ஏன்னா....என்னை விட பல மடங்கு அதிகமாய் என்னோட மித்ரா என்னைக் காதலிக்குறா...அவளுக்கு ஈடு கொடுக்கவாவது நான் அவளை கொஞ்சமாச்சும் காதலிக்கணும் ல..."என்றவன்..

என் நெற்றியோடு முட்டிக் கொண்டவாறே...

"இது கூட உண்மைதானே...??.."

அவனது கேள்விக்கு அழுகை பாதி புன்னகை பாதியாய் அவனது தலையினை கலைத்து விளையாடிய நான்...அவனது நெற்றியில் என் இதழ் முத்திரையை மென்மையாகப் பதித்துக் கொண்டேன்...

"உன்கிட்ட இதை சொல்லாமலேயே மறைச்சிட்டேன்னு என் மேல கோபமா சரண்...எனக்கு வேற வழி தெரியலைடா...உன்னையும் நான் கஸ்டப்படுத்திப் பார்க்க விரும்பல..."

"கோபம் இல்லைடி...வருத்தம்தான்..."என்று சொன்னவனின் முகத்தில் இப்போதும் அந்த வலி தெரிந்தது...

"இன்பத்தை மட்டும்தான் பகிர்ந்துக்கு முடியும்னா...அந்த நட்பில எந்த அர்த்தமுமே இல்லை...நான் எப்படி நல்லாயிருக்கனும்னு நீ நினைச்சியோ,அதே மாதிரிதான் மித்ரா என்னாலயும் உன்னை விட்டிட முடியாது..."

"என்கிட்ட இதை சொன்னா நான் உன்னை விட்டுப் போயிடுவேன்னு நினைச்சியா மித்ரா...??.."

"என்னை நீ என்னைக்குமே விட்டிட மாட்டன்னு எனக்குத் தெரியும் சரண்...ஆனாலும் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில எங்க என்னை நீ வெறுத்திடுவியோன்னு பயந்தேன்...அதான் உன்கிட்ட என் மனசை மறைச்சு உன்னை விட்டு கிளம்பினேன்..."

"நீயே உன்னை வெறுத்திட சொன்னாலும் என்னால உன்னை வெறுக்க முடியாதுடி...என்னோட மித்துவை எனக்கு காதலிக்க மட்டும்தான்டி தெரியும்..."

"உன்னை விட்டு என்னால விலகியிருக்கவும் முடியாது...யாருக்காகவும் எதுக்காகவும் உன்னை என்னால விட்டுக் கொடுக்கவும் முடியாது..."

"எப்பவுமே நீ எனக்கு மட்டுமேதான்....இனிமே உன்னை எங்கேயும் விட்றதாவே இல்லை..."

"இனிமே நீயே சொன்னாலும் உன்னை விட்டு நானும் எங்கேயும் போறதா இல்லை...என்னை இப்படியே இறுக்கிப் பிடிச்சுக்கோடா...இப்படியே உன்னோட அணைப்பிலேயே இருந்திடுறன்..."

நான் சொன்னதும் என் மூக்கோடு அவன் மூக்கை வைத்து உரசிக் கொண்டவன்,

"அப்படீங்களா மேடம்..."என்றபடியே என்னை மெதுவாய் தூக்கி அவனோடு இறுக்கிக் கொண்டான்....

"இது போதுமா இல்லை....என்று இழுத்துக் கொண்டே என் இதழ்களை நோக்கிக் குனிந்தான்...

ஆனால் அவனிடம் நான் இன்னும் கேட்டுத் தெளிவுபெற வேண்டியவை சிலது இருந்ததால்...என் கையால் அவனது உதடுகளை பொத்திக் கொண்ட நான்,

"இப்போதைக்கு இதுவே போதும் சேர்...நான் இன்னும் உன்கிட்ட கேட்க வேண்டியது கொஞ்சம் பாக்கியிருக்கு...அதுக்கப்புறம்தான் மத்ததெல்லாம்..."

"இப்போ இது ரொம்ப முக்கியமாடி...அப்புறமா பேசிக்கலாமே...?.."

அவனது கண்களில் தெரிந்த ஏக்கம்..என்னை அவன் பக்கமாய் இழுத்துக் கொண்டாலும்...சிலதை இப்போதே தெளிவுபடுத்திக் கொண்டால் நல்லதென்றே தோன்றியது...

"இதை இப்போவே கேட்டாகனும்...இல்லைன்னா என் தலையே வெடிச்சிடும்..."

"சரி என்னோட மித்துவோட தலையை பாதுகாக்குறதுக்காவது நான் மேடமோட டவுட்ஸ் எல்லாத்தையும் கிளியர் பண்ணிறன்...ஆனால் அதுக்கப்புறம் நான் பேசுற விதமே வேற..."என்றவாறே என்னைப் பார்த்து கண்ணடித்தவன்,

"என்ன எல்லாம் கேட்கனுமோ எல்லாத்தையும் கேளு மித்ரா...இனியும் என்னால ரொம்ப நேரம் காத்திட்டிருக்க முடியும்னு தோனல...."

இதுக்குமேல என்னாலையும்தான் முடியாதென்று மனதினுள்ளே நினைத்துக் கொண்ட நான்,வெளியே...

"ஆருக்குட்டி....ஆதிரா யாரு...??அந்த புதிரையும் விடுவிச்சுருடா...?.."

"நான் முதல் சொன்னதில எந்த மாற்றமுமே இல்லை மித்ரா... அவ என்னைக்குமே என்னோட பொண்ணுதான்...ஆனால்..."என்று அவன் தொடங்கும் போதே,

"அம்மாமாமாமாமாமாமா..."என்றவாறு என்னை இரு பிஞ்சுக் கரங்கள் அணைத்துக் கொண்டன...


தொடரும்...

எழுதியவர் : அன்புடன் சகி (27-Oct-17, 9:51 pm)
பார்வை : 535

மேலே