யாரை தூது அனுப்ப

பிறை நிலவை தூது அனுப்பினேன்
உன் மோக கண்ணை நோக்கியதால்
முழுமதி ஆனது...

நீலக்கடலை தூது அனுப்பினேன்
உன் கால்கள் தொட்டதால்
வெண் பூ அலை ஆனது..

செங்கதிர் வீசும் ஞாயிறை தூது அனுப்பினேன்
உன் மேனி அழகில்
தன் கதிரை மறைத்து பால் நிழல் ஆனது..

சந்தங்கள் ஒன்றிணைத்து தூது அனுப்பினேன்
உன் பாதக் கொலுசொலி கேட்டு
கொலுசின் மணி ஆனது

கற்குவியலை தூது அனுப்பினேன்
உன் சேலை மடிப்பு வருடியதால்
சுமக்கும் கல் மேடை ஆனது..

புறாவை தூது அனுப்பினேன்
உன் கை அசைவை கண்டு
உன் மடியில் சரணம் ஆனது...

கவிதை மடலை தூது அனுப்பினேன்
உன் புன் சிரிப்பில் விழுந்து
என் கவிதை மறைத்து வெள்ளை காகிதம் ஆனது..

சூரைக்காற்றை தூது அனுப்பினேன்
உன் காதணி நடனத்தில் மயங்கி
தென்றலாய் உன்னை தழுவியது...

கருமேகத்தை தூது அனுப்பினேன்
உன் மழலை மனதில் உருகி
மழை வெள்ளம் ஆனது...

இலையுதிர் மரங்களை தூது அனுப்பினேன்
நீ தொட்ட பரிசத்தால்
உனக்கு நிழல் தரும் நந்தவனம் ஆனது..

புன்செய் நிலத்தை தூது அனுப்பினேன்
உன் வியர்வை துளி விழுந்ததால்
உன் பாதம் ஏந்தும் புல்தரை ஆனது..

இறுதியாக
பூமியை தூது போக சொன்னேன்
உன் மோகன வலையில் சுழன்று
உன்னை மட்டும் சுற்றுகிறது..

தூது அனுப்பியது எல்லாம்
உன் மேல் காதல் கொள்ள
நான் யாரை தூது அனுப்புவேன்???...

- மூ.முத்துச்செல்வி

எழுதியவர் : மூ.முத்துச்செல்வி (10-Nov-17, 10:55 am)
Tanglish : yarai thootu anuppa
பார்வை : 179

மேலே