முடிவில்லா ஞானப்பயணம்
கடவுள் கிடையாது...
ஆம்...
அவர் பெயர் கடவுள் என்பது கிடையாது...
அப்படியெனில் கடவுள் உண்டு என்று எதைக் கொண்டு வாதாடுகிறீர்?...
நம்பிக்கை...
அது மூடநம்பிக்கை...
ஆம். இந்த மூடன் கொண்ட நம்பிக்கை...
உம்மை பகுத்தறிவாளி என்கிறார்களே!
ஆம். பகுத்தறிய முடியாத விடயங்களைப் பகுத்தறிய துடிக்கும் மூடன்...
நாம் எதைப் பற்றி உரையாடுகிறோம்?
கடவுள் கிடையாது என்பதைப் பற்றி...
அப்படியெனில் கடவுள் யார்?
கடந்தவர் கடவுளெனப்படுவார்...
எதைக் கடந்தவர்?
அனைத்தையும் கடந்தவர்...
அதை எப்படி அறிவது?
அறிய முற்படும் போதெல்லாம் அறிவு ஊற்றாகும்...
அப்படியெனில்?
முடிவில்லா ஞானப்பயணம்...
ஞானமெனப்படுவது?.
சித்தம் அடைய வேண்டிய தெளிவு...
அத்தெளிவு எத்தகையது?
மாசற்ற தூய நீரையொத்தது...
மாசு என்பது?
தன்னைத் தானே துன்புறுத்துவது...
அப்படியெனில்...
தன்னால் துன்பப்படுவது சிறு மலரானாலும், அது தன்னை தானே துன்புறுத்துவதற்கு இணை...
நீர் சொல்ல வருவது?
அன்பும், கருணையும் உடையதாயின் அது ஒழுக்கமும், நேர்மையும் ஓங்க கடமை புரியும் கடவுளெனப்படும்...
இது பித்தனின் புலம்பல்கள்...
ஆம். இது சித்தம் தெளிந்த பித்தனின் புலம்பல்கள்...