பாரதிக்கு பிறந்த நாள் வாழ்த்து

முண்டாசு கவிஞன், முத்தமிழ் அறிஞன் பிறந்தான் எட்டயபுரத்திலே
முப்பத்தி இரண்டு மொழிகள் கற்று முதிர்ந்தான் மொழியாற்றலிலே
படித்தான் நெல்லையிலே, பின் வசித்தான் சென்னையிலே
புசிக்க வழியின்றி, தவித்தான் வறுமையிலே
மனதில் உறுதி வேண்டும் என முழக்கமிட்டான்
மக்கள் மனதில் விடுதலைக்கு வித்திட்டான்
மாதர் தம் துயர் தீர்க்க, பெண் சுதந்திரம் போற்றினான்
நெஞ்சில் உறமுண்டு
நேர் கொண்ட நடையுண்டு
தமிழன் என்ற திமிர் உண்டு
தளராத உறுதி உண்டு
தாடியுடன், முறுக்கு மீசையும் உண்டு
சிங்கத்தின் பிடறியை பிடித்தாட்டிய பெருமை உண்டு
சிதம்பரனார், சிவா உடன் நட்பு உண்டு
செங்கோலை வீழ்த்த, அவன் எழுதுகோலுக்கு சக்தி உண்டு
புலவனாய், பத்திரிகையாளனாய், சுதந்திர போராட்ட வீரனாய்
பன்முக தோற்றம் கொண்ட, அவன் புகழ் பாட ஆயிரம் காரணமுண்டு
பார் போற்றும் எங்கள் பாரதி பிறந்த தினம் இன்று
அவன் புகழ் பாடி ,உளமாற வாழ்த்தி வணங்குவோம்
 
 
 
 
 
 

எழுதியவர் : பாரதி கேசன் என்கிற பஞ்சாப (11-Dec-17, 1:04 pm)
பார்வை : 298

மேலே