பகையானதே
பழையனவற்றை அழிக்கும்
போகி போல
ஊரை அழிக்க ஓடிவந்த
ஓகிப்புயல்
குமரியை புரட்டிபோட்டு
கலங்கப்பட்ட புயல்
மீனவ உயிரையும் பறித்து
மாபாவம் புரிந்தது
கொட்டி தீர்த்த மழையின்
கோரத் தாண்டவத்தால்
நதியெல்லாம் ஊருக்குள்
நிலமெல்லாம் நீருக்குள்
தாவரங்கள் தலை சாய
தோழமையாய் மின் கம்பங்கள்,
ஓடுகின்ற நதிக்கு
உறவாகி ஓடிப்போன பாலம்
மீன்பிடிக்க போனவர்கள்
மீண்டு வந்ததெத்தனை?
மாண்டு போனதெத்தனை?
மாயவனாவது அறிவானா?
மீனவ குடும்பங்களில்
இருள் சூழ்ந்ததுபோல்
அனைத்தும் இழந்து தவிக்கும்
ஊரும் இருளில்
சொந்தத்தை இழந்து
சொல்லி அழும் மாந்தருக்கு
உடனே சென்று ஆறுதல் கூற
ஒருவரும் நினைக்கலையே!
கடலில் தவித்த மீனவரை
காப்பதற்கு எண்ணாம
காரணங்கள் பல கூறி
கதை,கதையா சொன்னாலும்
பரிதவித்து புலம்பும் மனம்
பாழுங்கதையை ஏற்குமா?
பங்காளி உறவுபோல
பகையானதே அரசியல்.