அவள் சிரிப்பு
உந்தன் புன் சிரிப்பு பெண்ணே
என்னை சிந்திக்க வைத்தது
என் ஆணவத்திற்கோர் முற்றுப்புள்ளியானது
வணங்காமுடி என்றே என்னை
என் நண்பரும் சுற்றத்தாரும் அழைப்பர்
உந்தன் கனிமுகத்தைப் பார்த்தபின்னே
பெண்ணே பெண்ணே வீணே திரிந்த
நானும், உன் வடிவழகில் என் மனதை இழக்க
ஆணவம் அத்தனையும் அக்கணமே துறந்து
உன் முகத்தை என் மனதில் இருத்தி
உன் மீது பெரும் காதல் கொண்டேனடி !
என் சித்தமெல்லாம் உன் மயமானபின்னே
என்னை அறியாமலேயே என் மனம்
உன் மனதில் சேர்ந்துவிட்டதடி - இப்போது
உன் நெஞ்சை தொட்டுப்பார் அதில் கேட்கும்
என் மனதின் காதல், உன் மீது
நான் கொண்ட இந்த முதல் பார்வை தந்த
காதல், மீட்டிடும் தனி 'நாடியோசை'!,
உன் இதயத்திற்கு இதமளிக்க
காதல் பல்லவி பாடும் வீணையோசை , அது
என்னுள் உருவாகி உன் இதயத்தில் சங்கமிக்கும்
எந்தன் காதல் கீதம் ......................உனக்காக மீட்டியது!
மயக்கும் உந்தன் புன்னகைப் பெண்ணே
பாம்பாட்டி மகுடி எழுப்பும் ஓசை தந்ததோ
நானறியேன் , ஆனால் மகுடியின் ஓசைக்கு
மயங்கிய நாகமானேனடி நான்
உன் மனமெனும் பெட்டியில் இந்த
வணங்காமுடியை அடைத்துவிட்டாய்
ஆணவமாம் விடப் பற்கள் அத்தனையும்
உந்தன் புன்சிரிப்பு ஒன்றே பிடுங்கிவிட்டபின்
என்னுள் இனி நச்சு ஏதுமில்லையடி பெண்ணே
இனி என் வாழ்விற்கு நீதான் என்றும் மகுடியடி!
என் காதலை உன்னடியில் என் தலையாய்
வைக்கிறேனடி உன் புன் சிரிப்பில் வீழ்ந்த நான்
உனக்களிக்கும் காணிக்கையாய் அதை நீ
பெற்றுக்கொண்டு என்னை உன் காதலனாய்
ஏற்றுக்கொள்ளடி பெண்ணே புன்னகைப் பேரழகே