பட்டுடுத்திய ரோஜா -கங்கைமணி

பருவப்பானை சாயாமல் பார்த்துக்கொள்
பருகவரும் பாக்யவானை ஏற்றுக்கொள்.
பால் வடியும் முகம்தானோ ?
சலவை செய்யா நிலவிது !!.
ஜோடி புறா இணைசேர ,
சொக்கிப்போனது விழிப்புறாக்கள்.
பிட்டுக்கு மண் சுமந்தான் பகவான் -இந்த
பாட்டுக்கு என்ன சுமப்பேன் நான் ?!
நல்லவேளை குடம் சாயவில்லை
மனக்குடம் சாய்ந்ததோ ?
அவள் நினைவுக் களஞ்சியம் நிறைந்து வழிவதால்
கனவுத் தூரிகை கவிதை எழுதுதோ ?!
வரம்பெற்று பிறந்ததால்,
ரோஜாவுக்கே!...பட்டானது சேலை.
பொன்நகையே ! ஜொலி..ஜொலி
இதழ் தொட்ட புன்னகை வெளிப்பட்டால் நீ காலி!.
கால் மடித்த தாமரை ,புதிது !
சேல் அடைத்த இமைகளோ வலிது
மரமான பீரோ ,தாழிட்டத்தாரோ ?!
திறந்தவர் யார் ?...மனதையா ?..கதவையா ?
அவள் நிறம் தொட்டு செல்வதேன்,சூரியத் தூரிகையே!
வரைபடம் கண்டு நிறம் தீட்டத்தானோ ?!
ஏக்கத்து பார்வைக்கு எண்ணப்பதில் சொல்ல
எரிமலையின் தாக்கத்தை எதைக்கொண்டு வெல்ல.
-கங்கைமணி