நாஞ்சில் ஓருமைகள் 7
![](https://eluthu.com/images/loading.gif)
மன்னாதி மன்னவரே
மாயாண்டி சுடலை ஈசா
என் ஆதி அந்தமதை
எனக்கு சொன்ன சுடலை ஈசா.
கொண்டு வந்தது எதுவுமில்லை குடம் உடைத்து சொன்ன ஈசா.
மைந்தனில்லை பேரனில்லை கொள்ளி வைத்து சொன்ன ஈசா.
மகளுமில்லை தங்கையில்லை பூத்தூவி சொன்ன ஈசா.
தாரமில்லை தாலியில்லை தாளழுது சொன்ன ஈசா.
விதியதனால் பிறப்பெடுத்தேன் விரைந்து வந்து கூட்டிச்செல்லும்
கூடு நீக்கி நாழியாச்சு
குறைவில்லாதே கூட்டிச்செல்லும்.
நாறும் என்மெய் எரியலாச்சு நலமுடனே கூட்டிச்செல்லும்.
கண்டமது கருகலாச்சு
களித்தேன் வருவேன்
கூட்டிச்செல்லும்.
நெஞ்சுக்கூடும் நெருப்பிலாச்சு நிறைவாய் வந்தேன்
கூட்டிச்செல்லும்.
என் மண்டையோடும் தெறிக்க கண்டேன்
மாயாண்டி நீர் கூட்டிச்செல்லும்.
காடாத்தி கடல் சேர்த்தார் கரையிலென்னை கூட்டிச்செல்லும்.
ஆழியின் ஆலம் உண்டவரே அழகாய் வந்தேன் கூட்டிச்செல்லும்.