கசப்பினிமை

கைபிடித்தவனுடன்
நீ கையசைத்து
கடந்து சென்ற காட்சி
கடலடி பாறையாய்
கனத்துக்கிடக்கிறது

ஏனோ நீ
பள்ளிக்கூட வாசலில்
துள்ளிப் பிரியும்
நினைவு வந்து போகிறது
பள்ளியிலிருந்து தினமும்
இல்லம் திரும்புவாய்

விடுபட மறுத்த
உன் விரல்களை
வலிய பிரித்து
நடந்தபோது
உவகையும் வெறுமையும்
பெருமிதமும் பிரிதுயருமென
வித்தியாச அவஸ்தையில்
விம்மித் தணிகிறேன்

மகளே
கண்ணீர் கலந்த
என் பெருமூச்சு
சுமந்து வருகிறது
உனக்கான
வாழ்த்துகளையும்
பிரார்த்தனைகளையும்

- சுப்ரமண்ய செல்வா -

எழுதியவர் : சுப்ரமண்ய செல்வா (6-Sep-18, 7:56 pm)
சேர்த்தது : சுப்ரமண்ய செல்வா
பார்வை : 117

மேலே