மீண்டும் சுதந்திரம் பெறவேண்டும்

மீண்டும் சுதந்திரம் பெறவேண்டும்!

மீண்டும் சுதந்திரம் பெறவேண்டும்!
மீட்டுக் கொடுப்பவர் வரவேண்டும்!
சொந்த நாட்டிலே அடிமைப் பட்டோம்!
சொந்தங்களே எமைஎதிர்க்கக் கண்டோம்!
இடித்திடும் முன்னரே மின்னல்வரும்! - சுதந்திரம்
கிடைத்த பின்னரா இன்னல் வரும்?
விடியும் முன்னரே பெற்றதனாலோ
விடியலை இன்னும் காணவில்லை!
அந்நியன் ஒருவன் எமைஆண்டான்!- அவனை
அகிம்சை ஆயுதம் வென்றதடா!
புண்ணிய பூமியின் மனிதர்களே! இன்று
புதிய தலைமை அடிமை கொண்டார்!
எண்ணியதில்லை இதுவரையில், எங்களை
எங்களால் அடிமை கொள்வோம்(மென) !
உண்மையைப் பொய்கள் உயிர்பறிக்கும்
உலகினில் சுதந்திரம் நிலைத்திடுமோ? - அப்
பொய்யரைத் தீயினில் புடம்போட - ஓர்
புதிய தலைமுறை வாராதோ?
சுயநலப் பேய்களை விரட்டுகின்ற
சுதந்திர போர்ப்படை வாராதோ?
ஊர்கள் முழுவதும் படைஅமைப்போம்!
ஊழலை எதிர்த்துப் படையெடுப்போம்!
வேண்டிய செல்வம் பெறுவதற்கே - பிறர்(க்கு)
வேதனை தருபவர் யாவருமே - சிறைக்
கூண்டினில் அடைபட வேண்டுமடா! -நம்
கொடுமைகள் பொடிபட வேண்டுமடா!

எழுதியவர் : கவி இராசன் (1-Oct-18, 9:10 pm)
சேர்த்தது : கவி இராசன்
பார்வை : 11075

மேலே