நாட்குறிப்பு எழுதிய நாட்கள்

துள்ளித் திரிந்த காலமதில்
பள்ளிப் பருவத்துக் கனவுகளை
அள்ளி அள்ளி ஓர் குறிப்பில்
வெள்ளைத் தாளில் கரு மையால்
மெள்ள மெள்ளப் பதித்திடுவேன்;
உற்ற நண்பி உமாசுகி முதல்
ஊர்மாங்காய் பறித்த கதைவரைக்கும்
பெற்றவர் பெரியவர் ஆசிரியர்
போற்றி யிருந்த நாள் வரைக்கும்
கற்றது கை மண்ணளவே - இனிக்
கற்பேன் இவை எனுங் கனவுமுதல்
மற்றவர் போற்றிட, மணங் கண்டு நல்
மனையாளாய் வாழுவன் எனும்வரைக்கும்
தோன்றிய நினைவெல்லாம்
துள்ளி வந்து தாளில் விழ
ஞான்றும் நாட்குறித்து
நானெழுதிய நாட்கள் அவை...!

எழுதியவர் : தமிழ்க்கிழவி (7-Nov-18, 1:21 pm)
சேர்த்தது : தமிழ்க்கிழவி
பார்வை : 354

மேலே