மழைக்கு ஒதுங்கிய வானம்

மழைக்கு ஒதுங்கிய வானம்
*******************************
வெறித்துப் பார்க்கிறது வெளிறிய வானம்/
விடியலைத் தேடிடும் வான்மகள் தாபம்/
கொட்டிய நீரில் கரைந்ததோ துயரம்/
எட்டிப் பார்க்கும் முகத்தில் சோகம்/
சொடுக்குப் போட்டுத் தொடுக்கிறேன் கேள்வியை/
துடுக்கான வான்மகளே ஒதுங்கி நிற்பதேன்/
அடைகாத்தக் கருக்களை இழந்தாய் எதற்கு/
முறையோடு பதில்சொல் வைத்திருக்கிறேன் கணக்கு/
ஈர்த்துப் பிடித்தேன் நீரில் கருக்களை/
சேர்த்து வைத்தேன் ஆசைக் கனவுகளை/
ஒட்டிய வயிறும் பொய்த்தக் கனவும்/
கருகியப் பயிரைக் கைகளால் தடவும்/
நலிந்த உழவன் கண்களைக் கண்டேன்/
கலைந்தது கருக்கள் கிழிந்தது வயிறு/
சோவெனக் கொட்டியது மழை வெள்ளம்/
குளிர்ந்த பூமியால் சிலிர்த்தது தாய்மை/
மெல்லிய விசும்பலோடு சுருங்கியது கருப்பை/
மூடிய இமைகளில் சொட்டுது கண்ணீர்/
மீண்டும் விழுகுது பூமியில் தூறல்கள்.

எழுதியவர் : லட்சுமி (10-Nov-18, 6:47 am)
சேர்த்தது : Aruvi
பார்வை : 1462

மேலே