இரக்கமென்னும் தீயில் வேகுது மனமே
மாலை மங்கி இருள் சூழ்ந்த நேரம்,
பறவைகள் யாவும் தங்கள் கூட்டை நோக்கி சிறகடிக்கும்,
நான் மட்டும் ஏனோ வீட்டிலிருந்து விட்டில் பூச்சியாய் பறக்கிறேன் சிந்தனை சிறகை விரித்து.
தஞ்சமென்று வந்தவரை தயங்காமல் தாக்கும்,
மூச்சைப் போக்கும்,
அநர்த்தமான மனநிலை எங்கிருந்து என்னுள்ளே வந்தது?
கோடிக்கணக்கில் மனிதர்கள் சூழ்ந்த சமூகம் மீது வெறுப்பு பிறந்ததும் ஏனோ?
வாழ வழியில்லை என்று கையேந்துபவர்களுக்கு தன்னிடம் இருப்பதை தயங்காமல் அளித்த கைகள் இப்போது அளிக்க மறுப்பதேனோ?
எத்தனை முறை பிச்சை இடுவது என்றே கலங்கி மனம் எரிச்சலடைவதும் ஏனோ?
உடல் உழைப்பின்றி பிச்சை எடுப்பாரைக் கண்டால் சற்று கோபம் ஏற்பட்டாலும், " அண்ணா! தம்பி! ",என்று அழைத்தவர்களுக்கு எதையாவது அளிக்க வேண்டுமென்றே தோன்றுகிறது.
கையிலிந்த பத்து ரூபாயையும் கொடுத்துவிட்டு பேரூந்தில் செல்ல பணமின்றி நடந்து சென்ற அனுபவமும் எனக்கு ஏற்பட்டது.
அளவுக்கு அதிகமாக வரவு வந்தால் அள்ளிக் கொடுக்கலாம்.
இரக்கத்தை மட்டும் அளவுக்கு அதிகமாக கொடுத்து, செல்வத்தையெல்லாம் தூர வைத்து உள்ளத்தை மட்டும் உருக வைத்தது ஏனோ?